பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்   (Archbishop Paul Richard Gallagher)

அமைதிக்கான உரையாடலை முன்னெடுக்க மாஸ்கோ செல்கிறார் பேராயர் காலகர்

பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், ஆகஸ்ட் 24 முதல் 28 வரை மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின்போது உருசிய அரசு அதிகாரிகள், மாஸ்கோ திருப்பீடத்தின் பிரதிநிதிகள் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினரை அவர் சந்திக்க உள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

அமைதியை முன்னிறுத்தி, உரையாடல் மற்றும் தூதரக முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நோக்கில், பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள்,ஆகஸ்ட் 24 முதல் 28 வரை உருசியத் தலைநகர் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

மாஸ்கோவில் தங்கியிருக்கும் நான்கு நாள்களில், உருசியக் கூட்டமைப்பின் அரசு அதிகாரிகள், உருசிய அரசு அதிகாரிகள், மாஸ்கோ திருப்பீடத்தின் பிரதிநிதிகள் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினரை அவர் சந்திக்க உள்ளார்.

இப்பயணம் தூதரக ரீதியிலான சந்திப்புகளுடன், திருஅவை சார்ந்த சந்திப்புகளையும் உள்ளடக்கியதாக அமையும். உருசியாவில் பணியாற்றும் ஆயர்கள் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினரையும் அவர் சந்திக்க உள்ளார்.

மேலும், மாஸ்கோ முதுபெரும் மறைமாவட்டத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புகள் இடம்பெறுவதால், இப்பயணம் கிறிஸ்தவ ஒன்றிப்பு சார்ந்த பரிமாணத்தையும் கொண்டுள்ளது. உலகளாவிய அனைத்துலக உறவுகள் மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ள நிலையிலும், உரையாடலுக்கான பாதையைத் தொடர்ந்து முன்னெடுக்க திருப்பீடம் உறுதியாக இருப்பதை இப்பயணம் வெளிப்படுத்துகிறது.

பேராயர் காலகர் அவர்கள் ஏற்கனவே 2021 நவம்பரில் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது உருசிய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின், வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் மற்றும் மாஸ்கோ முதுபெரும் மறைமாவட்டத்தின் வெளிப்புறத் திருஅவை உறவுகளுக்கான துறையின் அப்போதைய தலைவரான பேராயர் இலாரியோன் அல்ஃபேயெவ் ஆகியோரைச் சந்தித்தார்.

தூதரக சந்திப்புகளுக்கு இணையாக, மாஸ்கோவிலுள்ள கத்தோலிக்க சமூகத்தினரையும் பேராயர் காலகர் அவர்கள் சந்திக்கிறார். ஆயர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதுடன், திருப்பலி நிறைவேற்றி, அருள்பணியாளர்கள் மற்றும் துறவியரையும் சந்திக்க உள்ளார்.

உருசியாவில் கத்தோலிக்கத் திருஅவை எண்ணிக்கையில் சிறிய சமூகமாக இருந்தாலும், பரந்த நிலப்பரப்பில் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ளது. மாஸ்கோவில் அமைந்துள்ள இறையன்னையின் உயர் மறைமாவட்டம், சாரத்தோவில் புனித கிளெமெந்து மறைமாவட்டம், நோவோசிபிர்ஸ்கில் அமைந்துள்ள உருமாற்ற மறைமாவட்டம் மற்றும் இர்குட்ஸ்கில் அமைந்துள்ள புனித யோசேப்பு மறைமாவட்டம் ஆகிய நான்கு மறைமாவட்டங்களை இது கொண்டுள்ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா தொற்றைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைக் காப்பாற்றவும் அனைத்துலக சமூகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

24 ஆகஸ்ட் 2026, 14:58