அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பாதைகள் குறித்து கர்தினால்கள் ஆலோசனை!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தலைமையில் ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இடம்பெறவுள்ள கர்தினால்களுக்கான சிறப்புக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது.
உலகெங்கும் நிலவும் மோதல்கள், அமைதியை நிலைநாட்டும் முயற்சிகள், நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் நற்செய்தி அறிவிப்பில் திருஅவையின் பங்கு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
செபம், மௌனம், சிந்தனை, குழு விவாதங்கள் மற்றும் பொது அமர்வுகள் கொண்ட ஆயர் மாமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கர்தினால்கள் 20 குழுக்களாகப் பிரிந்து பணியாற்றுவார்கள்" என்றும் "கூட்டம் முழுவதும் இரகசியத்தன்மையைப் பேணுவார்கள்" என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
வரும் ஜூன் 26, வெள்ளியன்று புனித பேதுரு பெருங்கோவிலில் இடம்பெறும் திருப்பலியுடன் தொடங்கும் இந்தக் கூட்டத்தில் நான்கு சிந்தனை அமர்வுகள் இடம்பெறும்.
முதல் அமர்வானது, "நாம் எந்த மாதிரியான உலகில் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளோம்?" என்ற தலைப்பிலும் இரண்டாவது அமர்வு, "அதிகார கலாச்சாரம் மற்றும் அன்பின் நாகரிகம்" குறித்தும் திருஅவைத் தலைவர்கள் சிந்திக்க உள்ளனர்.
ஜூன் 27, சனிக்கிழமையன்று, சமூகப் பிளவுகள் மற்றும் உள்ளூர் மற்றும் உலகளாவிய திருஅவைகளின் பங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, "பொது நலனை உருவாக்குதல்" என்ற தலைப்பில் விவாதங்கள் தொடரும். இறுதி அமர்வில், ஆயர் மாமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் 2027–2028 ஆம் ஆண்டுகளுக்கான ஆயர் மாமன்றக் கூட்டங்களுக்கான தயாரிப்புகள் குறித்து விவாதம் இடம்பெறும்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் உரையுடன் இந்த கூட்டம் நிறைவடையும், அதைத் தொடர்ந்து தே தேயும் (Te Deum) பாடலும் கர்தினால்களுடனான விருந்தும் இடம்பெறும். ஜூன் 29 திங்களன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் புனித பேதுரு மற்றும் புனித பவுல் பெருவிழாவை திருத்தந்தை தலைமை ஏற்று நடத்துவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.