திருப்பலி மறையுரையை பொதுநிலையினர் வழங்க அனுமதிக்க முடியாது!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
திருப்பலியின் போது, அருள்பணியாளர்கள் மற்றும் திருத்தொண்டர்கள் மட்டுமே மறையுரை நிகழ்த்த முடியும் என்பதை வழிபாட்டு முறை மற்றும் திருவருள்சாதன ஒழுங்குமுறைக்கான திருப்பீடத்துறை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜூன் 17, புதனன்று, ஜெர்மனி ஆயர் பேரவையின் தலைவரான ஆயர் ஹைனர் வில்மர் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், திருப்பலியின் போது மறையுரைக்கு பதிலாக, நியமிக்கப்பட்ட பொதுநிலையினர் ஒருவர் மறையுரை ஆற்ற அனுமதி கோரி ஜெர்மானிய ஆயர்கள் விடுத்த வேண்டுகோளை திருப்பீடத்துறை நிராகரித்துள்ளது.
இந்த முன்மொழிவுக்குப் பின்னால் உள்ள மேய்ப்புப் பணி சார்ந்த அக்கறைகளை அங்கீகரிக்கும் அதே வேளையில், "மறையுரை என்பது வெறும் ஒழுங்குமுறை சார்ந்த விடயம் மட்டுமல்ல, அது திருவழிபாட்டு முறையில் இயல்பிலேயே வேரூன்றியுள்ளது" என்று திருப்பீடம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் "இறைவார்த்தை வழிபாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் மறையுரை, நற்செய்தி அறிவிப்புக்கும், திருநிலைப்படுத்தப்பட்ட பணியாளர்களுக்குத் திருவருள்சாதனம் வழியாக ஒப்படைக்கப்பட்ட போதிக்கும் பணிக்கும் நெருக்கமான தொடர்புடையது" என்றும் திருப்பீடத்துறை தெரிவித்துள்ளது.
"நற்கருணைக் கொண்டாட்டத்தின் போது இறைவார்த்தையை அறிவிப்பது, திருநிலைப்படுத்தப்பட்ட பணியாளர்களின் அருள்சாதனப் பணியிலிருந்தும், இறை வார்த்தைக்கும் அருள்சாதனத்திற்கும் இடையிலான ஒற்றுமையிலிருந்தும் பிரிக்க முடியாதது" என்றும் திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.
"மறையுரைகளின் மேய்ப்புப் பணி செயல்திறனை மேம்படுத்த, அருள்பணியாளர்களுக்குத் தொடர் பயிற்சியளிக்க ஊக்குவித்த அந்தக் கடிதம், திருஅவைச் சட்டத்திற்கு உட்பட்டு, திருப்பலிக்கு வெளியே பல்வேறு சூழல்களில் பொதுநிலை நம்பிக்கையாளர்கள் நற்செய்தியை அறிவிக்கவும் போதிக்கவும் முடியும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.