ஜெருசலேமில் அல்-அக்ஸா வளாகத்தில் உள்ள டோம் ஆஃப் த ராக் – ட்ரோன் காட்சி. ஜெருசலேமில் அல்-அக்ஸா வளாகத்தில் உள்ள டோம் ஆஃப் த ராக் – ட்ரோன் காட்சி.  ( last Friday of Ramadan in Jerusalem )

இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இரு நாடுகள் தீர்வை மீண்டும் உறுதிப்படுத்தும் திருப்பீடம்

இஸ்ரேல்–பாலஸ்தீனம் இடையே நீதியான மற்றும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கு இரு நாடுகள் தீர்வே சிறந்த வழி என்ற திருப்பீடத்தின் நீண்டகால நிலைப்பாட்டை திருத்தந்தை பதினான்காம் லியோ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே “நீதியான மற்றும் நீடித்த” அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரே வழியாக, இரு நாடுகள் தீர்வுக்கு திருப்பீடம் நீண்டகாலமாக வழங்கி வரும் ஆதரவை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 16ஆம் நாள் காஸ்தல் கந்தோல்ஃபோவில் இடம்பெற்ற மூவேளை செப உரையின்போது பேசிய திருத்தந்தை, மாநிலத்தில் மீண்டும் அதிகரித்துள்ள வன்முறை மற்றும் துன்பங்களுக்கு மத்தியில், இரு நாடுகளை உருவாக்கும் முயற்சியை முன்னெடுக்க அனைத்துலக சமூகம் அவசரமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பல தசாப்தங்களாக திருப்பீடத்தின் நிலைப்பாடு தொடர்ந்து ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அவர்கள், இரு தரப்பினருக்கும் பாதுகாப்பும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியதுடன், எருசலேம் மற்றும் அதன் புனிதத் தலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

பின்னர், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் பாலஸ்தீனிய மக்களின் நியாயமான உரிமைகளை எடுத்துரைத்ததுடன், எருசலேம் திறந்தும் பாதுகாக்கப்பட்டும் இருக்கும் நகரமாகத் திகழ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் இரு மக்களும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள் என்ற கொள்கையை வலுவாக முன்வைத்தார். அதேவேளை, இஸ்ரேலின் பாதுகாப்புக்கான உரிமையையும், பாலஸ்தீனியர்களின் சுதந்திரமான தாயகத்திற்கான உரிமையையும் அவர் ஆதரித்தார்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோரும் இந்நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தினர். குறிப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாலஸ்தீன அரசை திருப்பீடம் அரசுமுறை அங்கீகரிப்பதை முன்னெடுத்ததுடன், இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் அமைதி முயற்சிகளையும் ஊக்குவித்தார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும் இந்த மரபைத் தொடர்ந்து, இரு மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அரசியல் கட்டமைப்பாக இரு நாடுகள் தீர்வு அமைகிறது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தொடரும் வன்முறைகள் மற்றும் அரசியல் தடைகள் இருந்தபோதிலும், நீடித்த அமைதியை ஏற்படுத்த இரு நாடுகள் தீர்வு இன்றியமையாதது என்ற நிலைப்பாட்டை திருப்பீடம் தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

18 ஆகஸ்ட் 2026, 14:02