சிறார்களின் பாதுகாப்புக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் உறுப்பினர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ சந்தித்தபோது. சிறார்களின் பாதுகாப்புக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் உறுப்பினர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ சந்தித்தபோது.  (@Vatican Media)

சிறார் பாதுகாப்பில் உறுதியான அர்ப்பணிப்பு தேவை!

சிறார் பாதுகாப்பு மற்றும் துன்புறுத்தல் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ, துன்புறுத்தல்கள் ஆழமான மன மற்றும் ஆன்மீக காயங்களை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார். திருஅவையின் அனைத்து இடங்களும் பாதுகாப்பான சூழல்களாக அமைய வேண்டும் என்றும், சிறார்களையும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் பாதுகாப்பது திருஅவையின் ஒட்டுமொத்த பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கிறிஸ்துவுடனான சந்திப்பு மனிதரை அன்பும் சுதந்திரமும் நிறைந்த வாழ்வை நோக்கி வழிநடத்துகிறது என்றும்,  ஆனால் துன்புறுத்தல் அனுபவங்கள் ஒருவரின் ஆன்மீக மற்றும் மனித வளர்ச்சியை பாதிக்கும் ஆழமான காயங்களை ஏற்படுத்துகின்றன என்றும்  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஜூன் 17, புதன்கிழமை, இலத்தீன் அமெரிக்காவில் சிறார் பாதுகாப்பு மற்றும் துன்புறுத்தல் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ‘சிறார்களைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்’ உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, சிறார்கள், இளையோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய அனைவருக்கும் திருஅவைகள் பாதுகாப்பான இடங்களாக அமைய வேண்டும் என்ற பொதுவான நோக்கத்திற்காக அவர்கள் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.

திருஅவையின் அனைத்து இடங்களும், உடல்ரீதியாகவும் இணையவழியிலும், அச்சம், சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை இன்றி இயேசு கிறிஸ்துவை அனுபவிக்கும் பாதுகாப்பான சூழல்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, துன்புறுத்தல்கள் மற்றும் அத்துமீறல்கள் மக்களின் மனதிலும் ஆன்மீக வாழ்விலும் ஆழமான காயங்களை ஏற்படுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சூழ்நிலைகளுக்கு திருஅவை செவிமடுத்தல், உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய திருத்தந்தை, சிறார்களையும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் பாதுகாப்பது திருஅவையின் ஒட்டுமொத்த பொறுப்பாகும் என்றும் எடுத்துக்காட்டினார்.

இறுதியாக, உள்ளூர் திருஅவைகளுக்கும் சமூக நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கலாச்சாரத்தை மேம்படுத்துமாறும் அவர்களைக்  கேட்டுக்கொண்டு தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

17 ஜூன் 2026, 14:10