பொதுநலனும் ஒற்றுமையும் பாவியாவின் எதிர்காலத்தை உருவாக்கும்!

பாவியா நகர மக்களிடம் உரையாற்றிய திருத்தந்தை, பொதுநலன், சமூக ஒற்றுமை மற்றும் குடிமைப் பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கல்வி, கலாச்சாரம் மற்றும் விசுவாசம் மனித முன்னேற்றத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்றும், ஏழைகள் மற்றும் தேவையுள்ளோருக்கான அக்கறையுடன் அனைவரும் இணைந்து சிறந்த சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 20, சனிக்கிழமையன்று, பாவியா மற்றும் சாந்த்'ஆன்ஜலோ லோடிஜியானோ மேய்ப்புப்பணிப் பயணத்தின் ஒரு பகுதியாக, பாவியாவின் வெற்றிச் சதுக்கமான பியாச்சா விட்டோரியாவில் (Piazza della Vittoria) திரண்டிருந்த நகர மக்களிடம் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் உரையாற்றினார். இப்போது அவ்வுரைக்கு செவிமெடுப்போம்.

அன்பான பேராயர் அவர்களே, நகர மேயர் அவர்களே, மதிப்பிற்குரிய அதிகாரிகளே, சகோதரர் சகோதரிகளே!

உங்களின் வரவேற்பிற்கும் அன்பான வாழ்த்துச் சொற்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். ஆயர் மற்றும் நகர மேயர் அவர்களின் வார்த்தைகள் வழியாக, பாவியா நகரமே தனது அழகையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த அழகு வெறும் வரலாற்றுச் சின்னங்களின் பெருமை அல்ல; மாறாக, கடந்த காலத்தின் அரிய பாரம்பரியத்தை நிகழ்காலத்தில் பொறுப்புடன் காத்து வளர்க்க வேண்டிய அழைப்பாகும்.

இந்த நகரின் வீதிகள், சதுக்கங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பங்குத் தளங்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் அனைத்தும் மனித மாண்பையும், ஒற்றுமையையும், கலாச்சார வளத்தையும் சாட்சியப்படுத்துகின்றன. இவை ஒவ்வொன்றும் மனிதரை தனிமனிதராக அல்ல, சமூகத்தின் ஓர் அங்கமாகக் கருதி அவரை வளர்க்கும் பணியைச் செய்கின்றன. “நகரம்” என்பது வெறும் இடம் அல்ல; அது மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வாழ்வியல் சமூகமாகும். ஒரு நல்ல சமூகம் பொதுநலனைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறது. உண்மையான குடிமகன் தனிப்பட்ட நலன்களை மட்டும் அல்லாமல், அனைவரின் நலனையும் முன்னிறுத்துபவராக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் அனைவரும் ஒரே நகரத்தின் குடிமக்கள்; ஒருவரின் நலன் மற்றவரின் நலனோடு பின்னிப்பிணைந்துள்ளது.

இன்றைய உலகில் அலட்சியமும் தனிமனிதப் போக்கும் சமூக உறவுகளை பலவீனப்படுத்துகின்றன. எனவே, பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் பொறுப்புடன் பங்கேற்க வேண்டும். நமது தெருக்கள், பூங்காக்கள், பொது இடங்கள் ஆகியவை மக்கள் சந்தித்து உறவுகளை வளர்க்கும் இடங்களாக இருக்க வேண்டும். பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே உரையாடலும் ஒற்றுமையும் வளர்க்கப்பட வேண்டும். இன்று நான் உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்: “எனது நகரத்தின் நலனில் எனக்கு அக்கறை இருக்கிறதா?” எனது அயலவரின் நலன், நான் வாழும் இடத்தின் அழகு, நான் பணியாற்றும் சூழலின் தரம் ஆகியவற்றில் உண்மையான அக்கறை கொள்ள வேண்டும். மனிதனும் இயற்கையும் இசைவாக வாழும் வாழ்க்கை முறையை நாம் பாதுகாக்க வேண்டும்.

பாவியா நகரம் கல்வி மற்றும் கலாச்சாரத்தின் மையமாகத் திகழ்கிறது. குறிப்பாக இங்குள்ள பல்கலைக்கழகங்கள் இளைஞர்களின் அறிவையும் ஆளுமையையும் வளர்க்கின்றன. கல்வி என்பது அறிவைப் பெறுவதற்காக மட்டுமல்ல; மனிதனை முழுமையாக உருவாக்குவதற்கான வழியாகும். அறிவியல், சட்டம், தத்துவம் போன்ற அனைத்து துறைகளும் மனிதனின் வளர்ச்சிக்கும் சமூக நலனுக்கும் சேவை செய்ய வேண்டும். இந்தப் பின்னணியில் புனித அகுஸ்தினாரின் வாழ்க்கை நமக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. உண்மையையும் நீதியையும் தேடும் அவரது தணியாத ஆர்வம், விசுவாசத்திற்கும் பகுத்தறிவிற்கும் இடையிலான ஆழமான உறவை எடுத்துக்காட்டுகிறது. சிந்தனையில்லாத விசுவாசமும், விசுவாசமற்ற பகுத்தறிவும் முழுமையடையாது என்பதை அவரது வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

விசுவாசம் மனிதனை நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கச் செய்கிறது. வாழ்க்கை மரணத்தில் முடிவதல்ல; இறைவன் வாழ்வின் படைப்பாளரும் மீட்பருமாவார் என்ற நம்பிக்கையை அது வழங்குகிறது. இந்த நம்பிக்கையிலிருந்து மனிதன் புதிய வழிகளைத் தேடி, தன்னையும் உலகையும் சிறப்பாகக் கவனிக்கக் கற்றுக்கொள்கிறான். பாவியா நகரில் திருஅவை, அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் தாயாகவும், புதிய மனிதநேயத்தை உருவாக்கும் சமூகமாகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. குறிப்பாக ஏழைகள், முதியவர்கள், தனிமையில் வாழ்பவர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்கள் ஆகியோருக்குச் சேவை செய்வதில் அது தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. இந்தப் பணியில் தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்களின் அர்ப்பணிப்புக்காக நான் நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கிறேன்.

அன்பான சகோதரர் சகோதரிகளே, உங்கள் நகரின் சின்னத்தில் இடம்பெற்றுள்ள சிலுவை வெறும் அடையாளமல்ல; அது கிறிஸ்தவ அன்பின் ஆழமான மதிப்புகளை நினைவூட்டுகிறது. அந்த அன்பை அடிப்படையாகக் கொண்டு, குடிமக்கள், சமூக அமைப்புகள், திருஅவை, அரசுத் துறைகள், பல்வேறு தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து பாவியாவின் எதிர்கால வரலாற்றை எழுத வேண்டும். உங்கள் ஒவ்வொருவரும் பொதுநலனுக்காக உங்களால் இயன்ற சிறந்ததை வழங்குமாறு நான் அழைக்கிறேன். உங்கள் குடும்பங்கள், இல்லங்கள் மற்றும் உங்கள் அனைவர்மீதும் இறைவனின் ஆசீர்வாதம் பொழிய நான் மனமார வாழ்த்துகிறேன். நன்றி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

20 ஜூன் 2026, 19:15