அன்பெனும் பெருங்கடலை அனைவருக்கும் திறந்துவிடுங்கள்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஜூன் 12, வெள்ளிக்கிழமை, ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாளில் டெனெரிஃபே துறைமுகத்தில் நடைபெற்ற இயேசுவின் திருஇருதயப் பெருவிழா திருப்பலியில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார். அத்திருப்பலியின்போது திருத்தந்தை அவர்கள் ஆற்றிய மறையுரை:
அன்பான சகோதர சகோதரிகளே,
இயேசுவின் திருஇதயப் பெருவிழாவை நாம் இன்று கொண்டாடும் வேளையில், கிறிஸ்துவின் இதயமே வரலாற்றின் இதயம் என்பதும், அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீதான கடவுளின் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்துகிறது என்பதும் நமக்கு நினைவூட்டப்படுகிறது. "இந்தத் திருத்தூதுப் பயணத்தில், நம்பிக்கைக்கும் நற்பணிகளுக்கும் சான்றுகளாக நான் சந்தித்த அத்தனை பேருக்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அதேபோல், உயிர்த்தெழுந்த ஆண்டவரைச் சந்திக்கும் ஒரு இடமாக இந்தத் தீவுகளை மாற்றியமைத்த உங்களின் வரவேற்புமனப்பான்மைக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
நம் கண்முன்னே விரிந்திருக்கும் கடலும் வானமும் கடவுளின் அன்பின் பரந்த தன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன. எனினும், கடவுளின் இதயத்தையும் ஒவ்வொரு மனித இதயத்தையும் ஒன்றிணைக்கும் ஏக்கம் அதைவிடவும் பெரியது. நாம் ஒருவரையொருவர் சந்திப்பதற்கும், ஒன்றிணைந்து வாழ்வதற்கும் என்றே படைக்கப்பட்டிருக்கிறோம். யாரும் தனித்த தீவு அல்ல. நாம் ஒரே இடத்தில் நிலைத்திருந்தாலும் சரி, அல்லது நம் தாய்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாலும் சரி, ஒவ்வொரு பயணமும் நம்மை மாற்றியமைக்கிறது, அத்துடன் மற்றவர்களுக்காக நம் இதயங்களைத் திறக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இலாபம், நுகர்வோர் கலாச்சாரம் மற்றும் முடிவில்லாத செயல்பாடுகளால் பெரும்பாலும் இயக்கப்படும் இவ்வுலகில், நற்செய்தி நம்மை இன்னும் ஆழமான ஒன்றிற்கு அழைக்கிறது. "உண்மையான மகிழ்ச்சி என்பது நாம் அதிகமாகச் சேர்த்து வைப்பதில் இல்லை; மாறாக, நம்மையே தாராளமாகப் பிறருக்குக் கொடுப்பதிலும், கடவுள் நம் வாழ்வில் தந்துள்ள மனிதர்களையும் ஆசீர்வாதங்களையும் மதித்து வாழக் கற்றுக்கொள்வதிலும் தான் இருக்கிறது." விருந்தோம்பலுக்கான உங்களின் அர்ப்பணிப்பு என்பது வெறும் ஒரு சேவை மட்டுமல்ல; அது ஒவ்வொரு மனிதனின் மாண்பிற்கும் நீங்கள் வழங்கும் சாட்சியாகும்.
ஆண்டவர் தனது மறைபொருட்களைக் எளியோருக்கும் சிறியோருக்கும் வெளிப்படுத்துகிறார் என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு நினைவூட்டுகிறது. ஏழைகள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுபவர்கள் கடவுளின் இதயத்தில் ஒரு தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் ஆண்டவர் மீது வைக்கும் நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிய முக்கியமான பாடங்களை நமக்குக் கற்றுத்தருகிறார்கள்.
இந்தத் தீவுகள் புலம்பெயர்வின் சந்திப்புப் புள்ளியாக அமைந்து, ஆபத்தான மற்றும் வேதனைமிக்க பயணங்களுக்குப் பிறகு இங்கு வந்து சேரும் பல சகோதர சகோதரிகளை வரவேற்கின்றன. கிறிஸ்தவர்களாகிய நாம் அவர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் அழைக்கப்பட்டுள்ளோம். அவர்களின் துணிச்சல், நம்பிக்கை மற்றும் கடவுள் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றுதல் ஆகியவை நற்செய்தியை நமக்கு அறிவிக்கக்கூடும், மேலும் வாழ்க்கையில் உண்மையிலேயே எது முக்கியமானது என்பதை நமக்கு நினைவூட்டக்கூடும்.
இளைஞர்கள் மற்றும் முதியவர்கள், ஏழைகள் மற்றும் பணக்காரர்கள், இங்கு வசிப்பவர்கள் மற்றும் வருகை தருபவர்கள் என ஒவ்வொருவர்மீதும் நீங்கள் அக்கறையுடன் இருக்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன். வெளிப்புறத் தோற்றங்களுக்கு அப்பால் சென்று, ஒவ்வொரு இதயத்திலும் இருக்கும் கடவுளுக்கான ஆழமான ஏக்கத்தைக் கண்டறியுங்கள்.
புனித யோவான் பறைசாற்றிய, "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்ற உண்மையை உங்களது சமூகங்கள் எப்போதும் பிரதிபலிக்கட்டும். அன்பில் நிலைத்திருப்பவர் கடவுளோடு நிலைத்திருக்கிறார், கடவுளும் அவரோடு நிலைத்திருக்கிறார். இதுவே நற்செய்தியின் இதயம் மற்றும் கிறிஸ்துவின் இதயம். இந்த அன்பெனும் பெருங்கடலை அனைவருக்கும் திறந்துவிடுங்கள். இதுவே உங்கள் அனைவருக்குமான எனது இறைவேண்டலும் நம்பிக்கையும் ஆகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
