சமூகத்தொடர்புக்கான திருப்பீடத் துறையின் முதல் பொதுநிலைப் பெண் தலைவர்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மரியா மான்ட்செராட் அல்வரடோ அவர்களை சமூகத்தொடர்புக்கான திருப்பீடத் துறையின் புதிய தலைவராக நியமித்துள்ளார். இந்த நியமனத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மரியா மான்ட்செராட் அல்வரடோ அவர்கள் தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.
தற்போது EWTN செய்தி நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றி வரும் அல்வரடோ அவர்கள், ஒரு திருப்பீடத் துறையை வழிநடத்தும் முதல் பொதுநிலை பெண்மணி ஆவார்.
மெக்சிகோ நகரில் பிறந்த அல்வரடோ, புளோரிடா பன்னாட்டுப் பல்கலைக்கழகத்திலும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 2009 முதல் 2023 வரை, பெக்கெட் நிதியத்தில் மத சுதந்திரம் மற்றும் மனித மாண்பை மேம்படுத்தும் தலைமைப் பொறுப்புகளை வகித்தார். 2023 முதல், தொலைக்காட்சி, வானொலி, அச்சு, எண்மின் மற்றும் சமூக ஊடகத் தளங்களில் ஏழு மொழிகளில் EWTN நிறுவனத்தின் உலகளாவிய ஊடக செயல்பாடுகளை அவர் கவனித்து வருகிறார்.
திருஅவையில் தலைமைத்துவப் பொறுப்புகளை பொதுநிலை ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரிவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தொடங்கப்பட்ட உரோமை நிர்வாகக் குழுவின் சீர்திருத்தத்தை இந்த நியமனம் தொடர்கிறது.
கடந்த 2018-ல் திருப்பீடத் துறையின் முதல் பொதுநிலை தலைவராக நியமிக்கப்பட்ட பவுலோ ருஃபினி அவர்களைத் தொடர்ந்து அல்வரடோ அவர்கள் பொறுப்பேற்கிறார். சுமூகமான பொறுப்பு மாற்றத்திற்கு உறுதியளித்த ருஃபினி அவர்கள், வேகமாக மாறிவரும் ஊடகச் சூழலில் நற்செய்தியை அறிவிக்கும் இந்த திருப்பீடத்துறையின் பணியைப் பாராட்டியுள்ளார்.
தனது முதல் அறிக்கையில், இந்த நியமனத்திற்கு நன்றியைத் தெரிவித்த அல்வரடோ அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு சேவை செய்யவும், கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை உலகிற்குத் தெரிவிக்கும் இத்துறையின் பணியைத் தொடர்ந்து வலுப்படுத்தவும் உறுதியளித்தார். இதற்கிடையில், EWTN நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியான மைக்கேல் பி. வார்சா, அவரது தலைமைத்துவத்தைப் பாராட்டியதுடன், EWTN நிறுவனத்தின் இறைவேண்டல்களும் ஆதரவும் அவருக்கு உண்டு என்று உறுதியளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
