இயேசுவுடனான ஆழமான உறவே நற்செய்தி அறிவிப்பின் அடித்தளம்!

நற்செய்தியை அறிவிப்பது என்பது இயேசுவுடனான தனிப்பட்ட இறையனுபவத்தைப் பிறருடன் பகிர்வதாகும் என்று கூறிய திருத்தந்தை, திருத்தூதுப் பணியின் வலிமை மனித முயற்சிகளிலோ கருவிகளிலோ அல்ல, மாறாக பரிசுத்த ஆவியின் செயல்பாட்டிலும் இறைவனுடனான ஆழமான உறவிலும் உள்ளது என்று வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

நம் இதயத்தின் ஆழத்தில், தனிப்பட்ட முறையில் நாம் கேட்கும் இறைவனின் குரலுக்கும், அதை உலகெங்கும் அறிவிக்க வேண்டிய நம் அழைப்புக்கும் இயேசு தொடர்பை ஏற்படுத்துகிறார் என்றும், நற்செய்தியை அறிவிப்பது என்பது முதன்மையாக அவருடனான நம் தனிப்பட்ட சந்திப்பையும் அனுபவத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஜூன் 21, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, “நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள்” என்ற மத்தேயு நற்செய்தி வார்த்தைகளை மேற்கோள்காட்டி, இயேசு தமது சீடர்களை பணிக்காக அனுப்பிய நிகழ்வை எடுத்துக்காட்டினார்.

திருத்தூதுப் பணியின் உண்மையான சக்தி, மனித முயற்சிகளிலோ நவீன கருவிகளிலோ மட்டும் அடங்கியதல்ல. மாறாக, நம்முள் செயலாற்றும் பரிசுத்த ஆவியின் வழிநடத்தலிலும், இறைவனின் அழைப்பிற்கு நாம் அளிக்கும் உண்மையான பதிலிலும் உள்ளது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அதனால்தான் புனித தோமா அக்வினாஸ், “நாம் தியானத்தில் கண்ட உண்மைகளை மற்றவர்களுடன் பகிர்வதே நற்செய்தி அறிவித்தல்” என்று கூறுகிறார் என்றும் எடுத்துக்காட்டினார்.

தியானம் என்பது சிலருக்கு மட்டுமே உரிய ஆன்மிக அனுபவம் அல்ல, மாறாக நாம் அனைவரும் அன்றாட வாழ்க்கையில் சிறிது நேரத்தை இறைவனுக்காக ஒதுக்கி, அமைதியில் அவரது குரலைக் கேட்கவும், நமது வாழ்வின் இன்ப துன்பங்களை அவருடன் பகிர்ந்து கொண்டு அவரது விருப்பத்தை அறியவும் அழைக்கப்படுகிறோம். என்றும் திருத்தந்தை கூறினார்.

இவ்வாறு இறைவனோடு நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ளும்போது, நமது நம்பிக்கை மேலும் ஆழமாகவும் உறுதியாகவும் வளரும் என்று  எடுத்துரைத்த திருத்தந்தை, அதன் பலனாக, நாம் உண்மையான மற்றும் நம்பகமான கிறிஸ்துவின் சீடர்களாக உருவாகி, வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நற்செய்தியின் ஒளியைப் பிரதிபலிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இன்றைய நற்செய்திப் பகுதியை எழுதிய புனித மத்தேயு, பல்வேறு சோதனைகளும் எதிர்ப்புகளும் நிறைந்த சூழலில் வாழ்ந்த கிறிஸ்தவ சமூகங்களை மனதில் கொண்டு தனது நற்செய்தியை எழுதியதாக எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அக்கால நம்பிக்கையாளர்கள் துன்புறுத்தல்களையும் பகைமையையும் எதிர்கொண்டனர் என்றும், அதேபோல், இன்றும் உலகின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் பல்வேறு சவால்களையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

அப்போது இருந்ததுபோல இன்றும், இயேசுவின் போதனைகளுக்கு உண்மையாக இருந்து அவரது வார்த்தையை அறிவிப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, வெறுப்புக்கு அன்பால் பதிலளிப்பதும், அகந்தைக்கு தாழ்மையால் பதிலளிப்பதும், மனச்சோர்வுக்கு விடாமுயற்சியால் பதிலளிப்பதும் எளிதானது அல்ல என்றும் எடுத்துரைத்தார்.

எனவே, நமது நம்பிக்கைக்கும் மறைப்பணிக்கும் அடித்தளமாக இயேசுவுடனான ஆழ்ந்த தனிப்பட்ட உறவு அமைய வேண்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, அந்த இறைஉறவுதான், எந்தச் சூழலிலும் நம்பிக்கை இழக்காமல் நிலைத்திருக்கவும், இறைபணியில் தொடர்ந்து ஈடுபடவும் தேவையான ஆற்றலை வழங்குகிறது என்றும் குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

21 ஜூன் 2026, 12:46