தேடுதல்

பார்சிலோனாவில் திருக்குடும்ப பேராலயத்தின் புதிய கோபுரத்தை அர்ச்சித்த திருத்தந்தை!

பார்சிலோனாவின் திருக்குடும்ப பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இயேசு கிறிஸ்துவின் புதிய கோபுரத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

பார்சிலோனாவில் உள்ள திருக்குடும்ப பேராலயத்தில்‌, அந்தப் பேராலயத்தின் கட்டிட வடிவமைப்பாளர் அந்தோணி கௌடியின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருப்பலி நிறைவேற்றி, இயேசு கிறிஸ்துவின் புதிய கோபுரத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார்.

திருப்பலி வழிபாட்டிற்கு முன்னதாக, நற்கருணை ஆராதனையில் பங்கேற்று செபித்த திருத்தந்தை பின்னர் கௌடியின் கல்லறை இடத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டார்."கட்டிடக்கலை, ஒளி மற்றும் குறியீடுகள் மூலம் கிறிஸ்தவ நம்பிக்கையை வலிமையாக வெளிப்பாடுத்தும் ஒரு பேராலயத்தை வடிவமைத்த ஒரு கட்டிடக்கலைஞரை கௌரவிக்கும் நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது.

தனது மறையுரையில், யோவான் நற்செய்தியில் உள்ள இயேசுவின் வார்த்தைகளைச் எடுத்துக்காட்டிய  திருத்தந்தை, கிறிஸ்துவின் மீதான நம்பிக்கை, அன்பு மற்றும் இரக்கத்தின் மூலம் வெளிப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் "போரை ஆதரிப்பதோ, அப்பாவி மக்களை துன்புறுத்துவதோ, அல்லது துன்பப்படுபவர்களையும், கண்ணீர் சிந்துபவர்களையும், வறுமையின் காரணமாக புலம்பெயர்வோரையும் புறக்கணித்துவிட்டு, தாங்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக எவரும் கூற முடியாது" என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

இதற்கு முன்பாக, ஸ்பெயின் நாட்டு மன்னர் ஆறாம் பிலிப், அரசி லெட்டீசியா மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் திருத்தந்தைக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது, திருக்குடும்பப் பேராலயம் கடவுளின் வார்த்தையாலும் நற்கருணையாலும் மக்களை ஒரே குடும்பமாக இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது எனத் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

"திருஅவையைப் பல கற்களால் கட்டப்பட்ட ஒரு உயிருள்ள கட்டமைப்பிற்கு ஒப்பிட்டு, கிறிஸ்து அதன் அடித்தளமாகவும் இலக்காகவும் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

பேராலயத்தின் முடிக்கப்படாத கட்டுமானப்பணி, கடவுளால் தொடர்ந்து செதுக்கப்பட்டு முழுமைப்படுத்தப்படும் கிறிஸ்தவ வாழ்வை அடையாளப்படுத்துவதாகவும் திருத்தந்தை கூறினார்.

இறுதியாக, பேராலயத்தின் கட்டுமானப் பணிக்காக பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, விளிம்பு நிலை மக்களையும் துன்பப்படுபவர்களையும் தூக்கி நிறுத்தவும், நம்பிக்கை, அன்பு மற்றும்

ஒற்றுமையின் செய்தி தங்கள் வாழ்வை வழிநடத்த அனுமதிக்கவும் நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

12 ஜூன் 2026, 12:07