தேடுதல்

கிறிஸ்துவின் அன்பை எல்லைகளைக் கடந்து எடுத்துச் சென்றவர் புனித கப்ரினி!

சாந்த்'ஆன்ஜலோ லோடிஜியானோவில் உரையாற்றிய திருத்தந்தை, குடிபெயர்ந்தோரின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ்கா சவேரியோ கப்ரினியின் வாழ்க்கையும் பணியும் இன்றைய உலகிற்கும் மிகுந்த பொருத்தமுடையவை என்று கூறினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 20, சனிக்கிழமையன்று, பாவியா மற்றும் சாந்த்'ஆன்ஜலோ லோடிஜியானோ மேய்ப்புப்பணிப் பயணத்தின் ஒரு பகுதியாக, குடிபெயர்ந்தோரின் பாதுகாவலரும் அமெரிக்காவின் முதல் புனிதருமான புனித பிரான்சிஸ்கா சவேரியோ கப்ரினியின் பிறப்பிடமான சாந்த்'ஆன்ஜலோ லோடிஜியானோவிற்கு வருகை தந்த திருத்தந்தை அவர்கள், அங்கு கூடியிருந்த இறைமக்களிடம் உரையாற்றினார். இப்போது அந்த உரைக்கு செவிமெடுப்போம்.

அன்பான சகோதரர் சகோதரிகளே,

புனித பிரான்சிஸ்கா சவேரியோ கப்ரினியின் சொந்த ஊரான உங்களனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆயர் மௌரிசியோ மால்வெஸ்தித்தி, பங்குத்தந்தை, நகர மேயர் மற்றும் குடிமை அதிகாரிகள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

1850ஆம் ஆண்டு சாந்த்'ஆன்ஜலோ லோடிஜியானோவில் பிறந்து, 1917ஆம் ஆண்டு சிக்காகோவில் இறைவனடி சேர்ந்த புனித கப்ரினிக்கு மரியாதை செலுத்துவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். அவர் குடிபெயர்ந்த மக்களின் பாதுகாவலர் மட்டுமல்ல; அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் புனிதரும் ஆவார். நான் பிறந்த நகரமான சிக்காகோவுடனும் அவருக்கு ஒரு சிறப்பான தொடர்பு உள்ளது. பாவியாவிற்கு அருகில் அவரது சொந்த ஊர் இருப்பதை அறிந்தபோது, இங்கு வருவதற்கான வாய்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.

புனித கப்ரினியின் வாழ்வில் திருத்தந்தையின் வழிகாட்டுதலுக்கு முக்கிய இடம் இருந்தது. தனது துறவற சபையின் மறைப்பணியை எந்தத் திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டிய நேரத்தில், அவர் திருத்தந்தை பதிமூன்றாம் லியோவின் ஆலோசனையை நாடினார். அப்போது திருத்தந்தை, “கிழக்கிற்கு அல்ல, மேற்கிற்கு செல்லுங்கள்” என்று தெளிவாகக் கூறினார். அதன் விளைவாக, அமெரிக்காவில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான இத்தாலிய குடியேறியோருக்குச் சேவை செய்வதே அவரது வாழ்நாள் பணியாக மாறியது.

புனித கப்ரினி முதலில் புனித பிரான்சிஸ் சவேரியாரைப் போல சீனாவுக்குச் செல்ல விரும்பினார். ஆனால் காலத்தின் அடையாளங்களை உணர்ந்து, அதிக தேவை இருந்த இடமே தனது பணிக்கான களமாக இருக்க வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார். இதுவே அவரது உண்மையான மறைப்பணித் தன்மையை வெளிப்படுத்தியது.

இன்றைய உலகிலும் குடியேற்றம் மிகப்பெரிய சவாலாகத் தொடர்கிறது. சூழ்நிலைகள் மாறியிருந்தாலும், குடிபெயர்ந்த மக்களின் துயரங்களும் தேவைகளும் இன்னும் நம்மைச் சிந்திக்க அழைக்கின்றன. புனித கப்ரினி இன்று உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? கிறிஸ்துவின் இருதயம் அவரிடம் என்ன கேட்டிருக்கும்? குடியேறியோருக்கான அக்கறையை தனது திருத்தந்தைப் பணியின் மையமாக வைத்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவரிடம் என்ன எதிர்பார்த்திருப்பார்? என்ற கேள்விகளை நாம் எழுப்ப வேண்டும்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது இறுதி திருத்தூது மடலான “அவர் நம்மை அன்புகூர்ந்தார்” (Dilexit Nos) என்ற ஆவணத்தில் கிறிஸ்துவின் திருஇருதய அன்பைப் பற்றி எழுதியிருந்தார். அந்த எல்லையற்ற அன்பே புனித கப்ரினியின் வாழ்வின் ஆதாரமாக இருந்தது. அவர் செய்த அனைத்துப் பணிகளும், அவர் மக்களை அணுகிய விதமும், கிறிஸ்துவின் இருதய அன்பிலிருந்து பிறந்தவையாகும்.

நானும் அவர் நம்மை அன்புகூர்ந்தார் என்ற திருத்தூது மடலில் ஏழைகள்மீதான அன்பைப் பற்றி எடுத்துரைத்தபோது, குடியேறியோருக்கான சேவையின் முன்னோடிகளாக புனித புனித திருமுழுக்கு யோவான், ஸ்காலப்ரினி மற்றும் புனித கப்ரினி ஆகியோரை நினைவுகூர்ந்தேன். குடியேறிய மக்களைத் தேடி அவர் எங்கும் சென்றார். குடிசைகள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் என அவர்கள் வாழ்ந்த இடமெல்லாம் சென்றடைந்தார். “இயேசுவின் இருதய அன்பிற்காக எந்தப் பணியும் மிகவும் கடினமானதல்ல; எந்த இடமும் மிகவும் தொலைவானதல்ல; எந்த மனிதரும் மிகவும் காயமடைந்தவராக இல்லை” என்று அவர் எழுதியிருந்தார்.

அன்புடையவர்களே, எல்லைகளைத் தாண்டி மனிதர்களுக்குச் சேவை செய்யும் இந்த மறைப்பணி அழைப்பு, இன்று முன்பைவிட அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்களை நான் அழைக்கிறேன்: புனித கப்ரினியை அறிந்துகொள்ளுங்கள். அவரது எழுத்துக்களை, கடிதங்களை, பயணக் குறிப்புகளை வாசியுங்கள். இயேசுவுக்கும் மறைப்பணிக்கும் அவர் கொண்டிருந்த தீவிர அன்பு உங்களைத் தூண்டும். அவர் ஆழ்ந்த செப வாழ்வும் அயராத சேவையும் ஒன்றிணைந்த ஒரு சிறந்த சாட்சியாக இருந்தார்.

இன்று என்னை அன்புடன் வரவேற்ற லோதி மறைமாவட்டத் திருஅவைக்கு நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். புனித கப்ரினியின் வாழ்க்கையில் ஒளிர்ந்த குணாதிசயங்கள், கிறிஸ்துவின் மீதான அன்பு, ஏழைகளுக்கான அர்ப்பணிப்பு, தாராள சேவை மனப்பான்மை, ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவை வாழ்வு  இவை அனைத்தும் உங்களிடமும் தொடர்ந்து வளரட்டும்.

புனித கப்ரினியின் முன்மாதிரியும் பரிந்துரையும் உங்களை ஊக்குவிக்கட்டும். கிறிஸ்துவை ஆழமாக நேசித்து, அவரது நற்செய்திக்கு உயிரோட்டமுள்ள சாட்சிகளாகவும், ஏழை எளியோரின் தேவைகளுக்கு கரிசனையுடன் பதிலளிப்பவர்களாகவும் நீங்கள் மாறட்டும். பல்வேறு பணிகளிலும் அருள்கொடைகளிலும் செழித்திருந்தாலும், சகோதரத்துவ உணர்வுடன் ஒன்றிணைந்து புனித வாழ்வை நோக்கிப் பயணிக்கும் திருஅவைக் குடும்பமாக வளர இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

இறுதியாக, இயேசுவின் திருஇருதய மறைப்பணிச் சகோதரிகளுக்காக நான் செபிக்கிறேன். புனித கப்ரினியின் ஆன்மீக மரபிற்கும் பணிக்குமான அர்ப்பணிப்பில் அவர்கள் நிலைத்திருக்க இறைவன் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்.மேலும், இறையாட்சிக்காக வரலாற்றின் நடுவே எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதை முழுத் திருஅவையும் புனித கப்ரினியிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும்.

உங்கள் அனைவருக்கும், உங்கள் குடும்பங்களுக்கும் என் இதயபூர்வமான திருத்தூதர் ஆசீர்வாதத்தை வழங்குகிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

20 ஜூன் 2026, 19:31