நோயை விட வாழ்வின் மதிப்பு மேலானது!
ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்
உண்மையான நலவாழ்வுப் பராமரிப்பு என்பது மருத்துவ நிபுணத்துவத்தை மட்டும் சார்ந்தது அல்ல என்றும், மாறாக, நோயாளிகளுடன் நேரில் இருப்பதும், அவர்களின் உடல், உளவியல் மற்றும் ஆன்மீகத் தேவைகளில் தனிப்பட்ட கவனம் செலுத்துவதும் அவசியம் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
மே 09, சனிக்கிழமையன்று, இத்தாலிய அமிலோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் சங்கத்தின் (AISLA) பயனாளிகள், குடும்பத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் நலவாழ்வுப் பணியாளர்களிடம் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ALS நோயால் பாதிக்கப்பட்டவர்களை "தீர்க்கதரிசிகள்" என்று புகழ்ந்து பேசிய திருத்தந்தை, துணிச்சல், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் மூலம் வாழ்க்கையின் உண்மையான மதிப்பை அவர்கள் வெளிப்படுத்துவதாக திருத்தந்தை குறிப்பிட்டார்.
உதவி வழங்குதல், ஆதரவுத் திரட்டுதல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்த அமைப்பு காட்டும் அர்ப்பணிப்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை, நோய் ஒருவரின் வாழ்வை முடக்கிவிடலாம், ஆனால் வாழ்வின் நன்மையும் அதன் உன்னத மதிப்பும் அந்த நோயைக் காட்டிலும் மிகப்பெரியது என்பதை அவர்களின் வாழ்க்கை உலகிற்குப் பறைசாற்றுகிறது என்று எடுத்துக்காட்டினார்.
பாதிப்படைந்தவர்களிடம் இயேசு காட்டிய இரக்கமுள்ள அணுகுமுறையின் பிரதிபலிப்பாக இந்த அமைப்பின் "நெருக்கம் மற்றும் தோழமையின் கூட்டணி" (alliance of closeness and proximity) இருப்பதாக பாராட்டிய திருத்தந்தை, ஒற்றுமை மற்றும் சுயநலமற்ற சேவையின் மூலம் இன்றைய "வீணாக்குதல் மற்றும் இறப்பு கலாச்சாரத்தை" (culture of waste and death) எதிர்ப்பதற்காக AISLA தன்னார்வலர்களுக்கு திருத்தந்தை நன்றி தெரிவித்தார்.
கிறிஸ்துவின் பாடுகளையும் உயிர்ப்பையும் (Passion and Resurrection) எடுத்துக்காட்டிய திருத்தந்தை, துன்பமே இறுதி முடிவல்ல என்றும் ஏனெனில், "வலியும் வேதனையும் ஒருபோதும் அன்பைத் தடுத்து நிறுத்த முடியாது அல்லது இறைவனின் வல்லமையை அணைத்துவிட முடியாது" என்றும் குறிப்பிட்டார்.
அமிலோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS) என்பது தன்னிச்சையான தசை இயக்கத்திற்கு காரணமான நரம்பு செல்களைப் பாதிக்கும் ஒரு முற்போக்கான நோயாகும். இது படிப்படியாக இயக்கம், பேச்சு மற்றும் சுவாசம் ஆகியவற்றைப் பாதிக்கிறது. 1983-இல் நிறுவப்பட்ட AISLA அமைப்பு, இத்தாலி முழுவதும் இல்ல பராமரிப்பு, ஆராய்ச்சி மற்றும் நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளித்து வருகிறது.
இறுதியாக, நலிந்த நிலையில் உள்ளவர்கள் ஒருபோதும் கைவிடப்படாமல் இருப்பதை AISLA அமைப்பு உறுதி செய்வதாக குறிப்பிட்ட திருத்தந்தை, வாழ்வின் சவால்களுக்கு மத்தியிலும், கிறிஸ்தவர்கள் தொடர்ந்து நம்பிக்கை கொண்ட மக்களாக வாழ வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
