மத்திய கிழக்கில் போரால் பாதிப்படைந்தவர்களுக்கு திருத்தந்தை ஆறுதல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் வன்முறை, குறிப்பாக குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் உட்பட அப்பாவி உயிர்கள் மீதான பேரழிவு தாக்கம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 10, செவ்வாய்க்கிழமையன்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், திருத்தந்தையின் ஆழமான இந்தக் கவலையை வெளிப்படுத்தியுள்ள வேளை, அங்கு நிகழ்ந்து வரும் குண்டுவெடிப்புகளைக் கண்டித்து, உடனடியாக போர் நிறுத்தப்பட இறைவேண்டல் செய்து வருவதாக அவர் கூறியுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளது.
குறிப்பாக, இந்தத் தாக்குதலில் லெபனோனில் உள்ள மரோனைட் அருள்பணியாளார் பியர் எல்-ரஹியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை. இஸ்ரேலிய கவச வாகனதால் (Tank) கிளயாவில் உள்ள பங்குத்தள மக்களின் இல்லங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி, அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டார்.
தாக்குதலுக்கு உள்ளான ஒரு குடும்பத்திற்கு உதவ விரைந்து சென்றபோது 50 வயதான அருள்பணியாளர் எல்-ரஹி காயமடைந்தார். அப்பகுதியில் இருந்து வெளியேற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டபோதிலும், அவர் தனது பங்குத்தள மக்களுக்குப் பணியாற்றுவதைத் தொடர்ந்தார். அவரது துயர மரணம் வரை தனது மேய்ப்பணி பராமரிப்பின் உணர்வை அவர் வெளிப்படுத்தினார்.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அவரது சக அருள்பணியாளரான அருள்தந்தை டூஃபிக் பௌ மெர்ஹி அவர்கள், அருள்பணியாளர் எல்-ரஹி அவர்களை அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவச் சமூகத்திற்குப் பணியாற்றிய அர்ப்பணிப்புள்ள மேய்ப்பர் என்று விவரித்தார். மேலும் அங்குத் தாக்குதல்கள் தொடர்வதால் அந்தப் பகுதியில் இப்போது ஏற்பட்டுள்ள பெரும் அச்சம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களின் மனித மாண்பை நிலைநாட்ட வலியுறுத்தியும், அமைதிக்கான திருத்தந்தையின் அழைப்பை எடுத்துக்காட்டியுள்ள அருள்பணியாளர் மெர்ஹி அவர்கள், "போரும் வன்முறையும் போதும், நாங்கள் கொஞ்சம் மாண்புடன் வாழ மட்டுமே வேண்டுகிறோம்" என்று தனது வேதனை நிறைந்த உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அதிகரித்து வரும் வன்முறைக்கு மத்தியில், புனித பூமியின் பிரான்சிஸ்கன் காப்பகம், தீரிலுள்ள அவர்களின் துறவு இல்லத்தில் 200-க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த முஸ்லிம்களைத் தங்க வைத்துள்ளது. மேலும் இப்பகுதியில் 3,00,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு தேடி தெற்கு லெபனோனை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
