தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை வழங்கும் திருத்தந்தை புதன் மறைக்கல்வி உரை வழங்கும் திருத்தந்தை   (AFP or licensors)

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

மனித மற்றும் இறை பரிமாணங்கள் ஒன்றுக்கொன்று மாற்றாக இல்லாமல், இணக்கமாக ஒன்றாக உள்ளன. இதன் காரணமாக, திருஅவைக்கு மனிதம் மற்றும் தெய்வீகம் இரண்டும் கொண்ட ஒரு சிறப்பு இயல்பு உள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மார்ச் 04, புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு 'மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஆவணம் குறித்த தனது சிந்தனைகளையும் எண்ணங்களையும் திருப்பயணிகளுடன் இவ்வாரமும் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. முதலில் திருத்தூதர் புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.

"சகோதரர் சகோதரிகளே, அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும். அவரால்தான் முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசை நார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்புப் பெற்று வளர்ச்சியடைகிறது." (எபே 4:15-16)

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு 'மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஆவணம் குறித்த நமது சிந்தனைகளை இவ்வாரமும் தொடர்வோம். முதல் பிரிவில், திருஅவை என்றால் என்ன என்பது பற்றிய முதன்மைக் கேள்வி உரையாற்றப்படும் இடத்தில், அது "ஒரு சிக்கலான எதார்த்தம்" (எண். 8) என்று விவரிக்கப்பட்டுள்ளது. இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம்: திருஅவையை சிக்கலாக்குவது எது? சிலர் இது சிக்கலானது மற்றும் விளக்க கடினமாக இருப்பதால் சிக்கலானது என்று நினைக்கிறார்கள். மற்றவர்கள் இது இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு நிறுவனம் மற்றும் வேறு எந்தச் சமூக அல்லது மதக் குழுவிலிருந்தும் வேறுபட்ட குணங்களைக் கொண்டிருப்பதால் இது சிக்கலானது என்று நம்புகிறார்கள்.

இருப்பினும், இலத்தீன் மொழியில், "காம்ப்ளெக்ஸா" (complexa) என்ற சொல் உண்மையில் ஒரே எதார்த்தத்திற்குள் வெவ்வேறு அம்சங்கள் அல்லது பரிமாணங்களின் வரிசைப்படுத்தப்பட்ட ஒன்றிப்பைக் குறிக்கிறது. இதனால்தான் 'மக்களினங்களின் ஒளி'  என்ற இந்த ஆவணம், திருஅவை என்பது நன்கு கட்டமைக்கப்பட்ட ஓர் உயிரினம் என்றும், அதில் மனித மற்றும் இறை பரிமாணங்கள் பிரிக்கப்படாமலும் குழப்பம் இல்லாமலும் இணைந்து வாழ்கின்றன என்றும் கூற முடியும்.

முதல் பரிமாணம் உடனடியாக உணரத்தக்கது, ஏனெனில் திருஅவை என்பது ஆண்கள் மற்றும் பெண்களின் சமூகமாகும், அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதன் மகிழ்ச்சியையும் போராட்டத்தையும் தங்கள் பலம் மற்றும் பலவீனங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள், நற்செய்தியை அறிவிக்கிறார்கள் மற்றும் வாழ்க்கைப் பயணத்தில் நம்முடன் வரும் கிறிஸ்துவின் உடனிருப்பின் அடையாளமாக இருக்கிறார்கள். இந்த இறை பரிமாணம் அதன் உறுப்பினர்களின் சிறந்த முழுமையோ அல்லது ஆன்மிக மேன்மையோ அல்ல, மாறாக கிறிஸ்துவில் உணரப்பட்ட மனிதகுலத்திற்கான கடவுளின் அன்பின் திட்டத்திலிருந்து திருஅவை உருவாக்கப்பட்டது என்பதே உண்மை. ஆகையால், திருஅவை ஒரே நேரத்தில் மண்ணகத்திற்குரிய சமூகமாகவும், கிறிஸ்துவின் மறையுடலாகவும், காணக்கூடிய ஒரு சபையாகவும், ஆன்மிக மறைபொருளாகவும், வரலாற்றில் இருக்கும் ஓர் எதார்த்தமாகவும், விண்ணகத்தை நோக்கித் திருப்பயணம் செய்யும் மக்களாகவும் உள்ளது (LG, 8; CCC, 771).

மனித மற்றும் இறை பரிமாணங்கள் ஒன்றுக்கொன்று மாற்றாக இல்லாமல், இணக்கமாக ஒன்றாக உள்ளன. இதன் காரணமாக, திருஅவைக்கு மனிதம் மற்றும் தெய்வீகம் இரண்டும் கொண்ட ஒரு சிறப்பு இயல்பு உள்ளது. அது பாவிகளாகிய மக்களை வரவேற்று அவர்களைக் கடவுளிடம் நடத்திச்செல்ல உதவுகிறது. திருஅவையின் இந்த நிலையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் விதமாக, 'மக்களினங்களின் ஒளி'  என்ற இந்த ஆவணம் கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. பாலஸ்தீனத்தில் இயேசுவைச் சந்தித்த மக்கள் அவரை ஓர் உண்மையான நபராகக் கண்டனர். அவர்கள் அவரது முகத்தையும், அவரது கைகளையும் கண்டு, அவரது குரலையும் கேட்டனர். அவரைப் பின்பற்ற முடிவு செய்தவர்கள், அன்புடன் நோக்கும் அவரது பார்வையின் அனுபவத்தாலும், அவரது ஆசீர்வதிக்கும் கரங்களின் தொடுதலாலும், அவரது விடுதலை மற்றும் நலமாக்கும் வார்த்தைகளாலும் துல்லியமாக ஈர்க்கப்பட்டனர்.

இருப்பினும், அதேவேளையில், அந்த மனிதரைப் (இயேசு கிறிஸ்து என்னும் இறைமனிதர்) பின்பற்றுவதன் வழியாக, சீடர்கள் கடவுளுடனான ஒரு சந்திப்பிற்குத் தங்களைத் திறந்த மனம் கொண்டவர்களாக மாற்றிக்கொண்டனர். கிறிஸ்துவின் திருவுடல் உண்மையில், அவரது முகம், அவரது சைகைகள் மற்றும் அவரது வார்த்தைகள் யாவும் கண்ணுக்குத் தெரியாத கடவுளை வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றன. இயேசு உண்மையில் யார் என்பதன் காரணமாக, நாம் மீண்டும் திருஅவையை பார்க்க முடியும். நாம் அதனைக் கூர்ந்து நோக்கும்போது,​​அது சாதாரண மக்களால் ஆனது என்பதைக் காணலாம். சிலவேளைகளில், அவர்கள் நற்செய்தியின் அழகைக் காட்டுகிறார்கள், மற்ற நேரங்களில் அவர்கள் மற்றவர்களைப் போலவே போராடித் தவறுகளைச் செய்கிறார்கள்.

இருப்பினும், துல்லியமாக அதன் உறுப்பினர்கள் மற்றும் அதன் வரையறுக்கப்பட்ட மண்ணகத்திற்குரிய அம்சங்கள் வழியாக, கிறிஸ்துவின் உடனிருப்பும் அவரது மீட்பின் செயலும் வெளிப்படுத்தப்படுகின்றன. நமது முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் கூறியது போல, நற்செய்திக்கும் நிறுவனத்திற்கும் இடையே எந்த எதிர்ப்பும் இல்லை; மாறாக, திருஅவையின் கட்டமைப்புகள் "நமது காலத்தில் நற்செய்தியை உணர்ந்து உறுதிப்படுத்துவதற்கு" துல்லியமாகப் பணியாற்றுகின்றன (சுவிட்சர்லாந்து ஆயர்களுக்கான உரை, நவம்பர் 9, 2006). மண்ணகத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு சிறந்த மற்றும் தூய்மையான திருஅவை இல்லை, ஆனால் வரலாற்றில் மனுவுருவெடுத்த கிறிஸ்துவின் ஒரே ஒரு திருஅவை மட்டுமே உள்ளது.

இதில்தான் திருஅவையின் தூய்மை அடங்கியுள்ளது: கிறிஸ்து அதில் வாழ்கிறார், அதன் உறுப்பினர்களின் சிறிய தன்மை மற்றும் வலுவற்ற இயல்பின் மூலம் (smallness and fragility) தொடர்ந்து தம்மையே கொடுக்கிறார். அதில் நிகழும் இந்த நிரந்தர அருள்வியப்புச் செயல் (miracle) பற்றி சிந்திப்பதன் மூலம், கடவுளின் "முறையை" (method) நாம் புரிந்துகொள்கிறோம்: அவர் தனது படைப்புகளின் பலவீனத்தின் மூலம் தன்னைத்தானே காணக்கூடியவராக ஆக்குகிறார், தொடர்ந்து வெளிப்படுத்தி செயல்படுகிறார். இதனால்தான், முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நற்செய்தியின் மகிழ்ச்சி' (The Joy of the Gospel) என்ற தனது திருத்தூது அறிவுரை மடலில், "மற்றவரின் புனித பூமிக்கு முன் உங்கள் செருப்புகளைக் கழற்றக்  கற்றுக்கொள்ளுங்கள்" என்று அனைவரையும் வலியுறுத்துகிறார் (காண்க. விப 3:5) (எண். 169).

இது அதன் புலப்படும் வடிவங்களை ஒழுங்கமைப்பதன் மூலம் மட்டுமல்லாமல், கிறிஸ்துவின் உடலாகிய ஆன்மிகக் கட்டிடத்தை நம்மிடையே ஒருமைப்பாடு மற்றும் பிறரன்பு செயல்கள் மூலம் கட்டியெழுப்புவதன் வழியாகவும் இன்றும் கூட திருஅவையைக் கட்டியெழுப்ப நமக்கு உதவுகிறது. உண்மையில், பிறரன்புப் பணிகள், உயிர்த்தெழுந்தவரின் உடனிருப்பைத் தொடர்ந்து உருவாக்குகின்றன. "எல்லோரும் பிறரன்பு செயல்களில் மட்டுமே கவனம் செலுத்துவதற்கு விண்ணகம் அருளட்டும்: அது மட்டுமே அனைத்தையும் வெல்லும், அது இல்லாமல் எப்பொருளுக்கும் மதிப்பில்லை; அது எங்கிருந்தாலும், அனைத்தும் அதன் பக்கம் ஈர்க்கப்படும்" (மறையுரை. 354,6,6) என்று புனித அகுஸ்தினார் கூறினார்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 மார்ச் 2026, 11:17