போர்த்துகீசிய அரசுத் தலைவருடன் திருத்தந்தை சந்திப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 02, திங்கள்கிழமை காலை, திருப்பீடத்தில் போர்ச்சுக்கல் குடியரசுத் தலைவர் மார்செலோ ரெபெலோ தெ சோசா அவர்களைச் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருத்தந்தையுடனான இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ரெபெலோ தெ சோசா அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் இருவரையும் சந்தித்து உரையாடினார்.
"விவாதங்கள் சுமுகமானவையாகவும், திருப்பீடத்திற்கும் போர்ச்சுகல்லுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும், போர்ச்சுகல்லுக்கும் தலத்திருஅவைக்கும் இடையிலான நேர்மறையான உறவுக்கான நன்றியை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் இருந்தது" என்று தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
"அதேவேளையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் கிறிஸ்டின் புயல் ஏற்படுத்திய கடுமையான விளைவுகள் மற்றும் சேதங்கள் குறித்தும் விவாதித்தன" என்றும் உரைக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.
மேலும் இந்தச் சந்திப்பின்போது தேசிய மற்றும் அனைத்துலகச் சமூக-அரசியல் பிரச்சனைகள் குறித்த பரிமாற்றம் இடம்பெற்றதாகவும், குறிப்பாக,
போர்த்துக்கீசிய மொழி பேசும் நாடுகளில் கவனம் செலுத்தப்பட்டதாகவும், உலகளவில் அமைதிக்கான நீடித்த அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
