தேடுதல்

மூவேளை இறைவேண்டல் உரை வழங்கும் திருத்தந்தை மூவேளை இறைவேண்டல் உரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

அன்பில் வேரூன்றிய நீதியைத் தழுவிக்கொள்ளுங்கள்!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தனது மூவேளை இறைவேண்டல் உரையில், வெளிப்புற அனுசரிப்பில் அல்லாது, அன்பில் வேரூன்றிய நீதியின் வடிவத்தைத் தழுவிக்கொள்ளவும், இறையாட்சியின் நீதிக்கான அழைப்பை நன்கு புரிந்துகொண்டு வாழ்வும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"உண்மையான நீதி அன்பில்தான் அடங்கியுள்ளது என்றும், சட்டத்தின் ஒவ்வொரு கட்டளையிலும், அன்பிற்கான அழைப்பை அடையாளம் காண நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இயேசு நமக்குக் கற்பிக்கிறார்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ

பிப்ரவரி 15, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.

இந்நாளில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு குறித்த நற்செய்தி வாசகத்தை (காண்க. மத் 5: 17-37) மையமாகக் கொண்டு தனது சிந்தனைகளை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை

இறையாட்சியின் புதிய தன்மைக்குள் நுழையுங்கள்

வெளிப்புற அனுசரிப்பில் அல்ல, அன்பில் வேரூன்றிய நீதியின் வடிவத்தைத் தழுவிக்கொள்ள விசுவாசிகளை வலியுறுத்திய திருத்தந்தை, மோசேக்குக் கொடுக்கப்பட்ட சட்டத்தின் ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்தி, "இறையாட்சியின்  புதிய தன்மைக்குள்" நுழைய விசுவாசிகளை இயேசு அழைக்கிறார் என்று அவர் விளக்கினார்.

"சட்டம் அன்பினால் துல்லியமாக நிறைவேற்றப்படுகிறது" என்று மொழிந்த திருத்தந்தை, "மக்களை மதவாதிகளாகக் காட்டுவதற்காக இந்தக் கட்டளைகள் எழுதப்படவில்லை" என்றும், "கடவுளுடனும் ஒருவர் ஒருவருடனும் உண்மையான உறவைப் பேணுவதற்கு மக்களுக்கு உதவுவதற்காகவே அவை எழுதப்பட்டன" என்று குறிப்பிட்டார்.

மேலும் "இயேசு சட்டத்தை அழிக்கவில்லை, மாறாக அன்பின் மூலம் அதை நிறைவு செய்தார்"  என்று விசுவாசிகளுக்கு வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.

மாற்றம் நிறைத்த நேர்மையான இதயம் கொண்டிருங்கள்

"சட்டவல்லுநர்கள் மற்றும் பரிசேயர்களுக்கு அப்பாற்பட்ட நன்மையுடன் கூடிய ஒரு வாழ்வை வாழ்வதற்கு இயேசு விசுவாசிகளுக்குக் கற்பிக்கிறார்" என்றும், "இந்தப் பெரிய நன்மை என்பது வெளிப்புற விதிகளைப் பின்பற்றுவது மட்டுமல்ல, மாற்றம் நிறைந்த மற்றும் நேர்மையான ஓர் இதயத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது" என்றும் விளக்கினார் திருத்தந்தை,

"சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்... ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்ற பழக்கமான நற்செய்தி விதியைப் பயன்படுத்தி, "இந்த வேறுபாடுகள் வெளிப்புற மத விதிகளுக்கும் இறையாட்சியின் ஆழமான நீதிக்கும் இடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்துகின்றன" என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

புனித பவுலடியாரை மேற்கோள் காட்டி, "சட்டத்தை மனிதகுலத்தை கிறிஸ்துவை நோக்கி வழிநடத்தும் ஓர் ஆசிரியர்" என்று விவரித்த திருத்தந்தை,  "இப்போது, ​​கடவுள் இயேசுவின் வடிவில் நம்மிடையே இருக்கிறார்" என்றும், "விசுவாசிகளைத் தம்முடைய பிள்ளைகளாக்கி, ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் வாழ அழைக்கிறார்" என்றும் எடுத்துரைத்தார்.

அன்பையும் அக்கறையையும் காட்டுங்கள்

"நம் வார்த்தைகள் ஒருவரின் மாண்பைப் புண்படுத்தினால், உடல் ரீதியான வன்முறையைப் பயன்படுத்தாமல் இருப்பது மட்டும் போதாது" என்று கூறிய திருத்தந்தை, "அதுபோல, திருமண வாழ்வில் பிரமாணிக்கமாக இருப்பது என்பது விதிகளைப் பின்பற்றுவது மட்டுமல்ல, அன்பையும் அக்கறையையும் காட்டுவது ஆகும்" என்றும் உரைத்தார்.

மேலும் "நற்செய்தி நமக்கு மதிப்பீடுகள் கொண்ட இந்தப் படிப்பினையை வழங்குகிறது, அதாவது, குறைந்தபட்ச நீதி மட்டுமே போதாது; மிகுந்த அன்பும் தேவை," என்பதை எடுத்துக்காட்டுகிறது"  என்று விசுவாசிகளுக்கு விளக்கினார் திருத்தந்தை.

இறுதியாக, அன்னை கன்னி மரியாவின் பரிந்துரையில் தங்களை ஒப்படைக்குமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, இறையாட்சியின் நீதிக்கான அழைப்பை நன்கு புரிந்துகொள்ளவும் அதன்படி வாழவும் உதவுமாறு அன்னையிடம் மன்றாடுமாறு கேட்டுக் கொண்டு தனது மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 பிப்ரவரி 2026, 12:10