அசிசி நகர் புனித பிரான்சிஸ் கல்லறையில் இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை அசிசி நகர் புனித பிரான்சிஸ் கல்லறையில் இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை   (ANSA)

அசிசி நகர் புனித பிரான்சிஸ் கல்லறையில் திருத்தந்தை இறைவேண்டல்

"உலகம் நம்பிக்கையின் அடையாளங்களைத் தேடும் நேரத்தில் புனித அசிசியாரின் சான்று வாழ்வு மிகவும் முக்கியமானது" : திருத்தந்தை பதினான்காம் லியோ

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

நவம்பர் 20, இவ்வியாழனன்று, இத்தாலியின் அசிசியில் உள்ள புனித பிரான்சிஸ் கல்லறையில் இறைவேண்டல் செய்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், " உலகம் நம்பிக்கையின் அடையாளங்களைத் தேடும் இவ்வேளையில்  அவரது சான்று வாழ்வு மிகவும் முக்கியமானது என்று மொழிந்தார்.

புனித பிரான்சிஸ் அசிசியார் மறைவின் 800-வது ஆண்டு நிறைவை நெருங்கும் இவ்வேளையில், இந்தப் புனித இடத்திற்கு  வந்தது  ஓர் ஆசீர்வாதம் என்றும், இந்த மகத்தான, பணிவான, மற்றும் ஏழை புனிதரை நினைவுகூர நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல், இறைவேண்டல் செய்த திருத்தந்தை, புனிதரின் உறுதியான வாழ்க்கையையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த வேளை, மக்கள் திரளாக வந்து திருத்தந்தையை  வரவேற்று மகிழ்ந்தனர்.

மேலும் அங்கிருந்து மொண்தேஃபால்கோவிற்குச் சென்று, அங்குத் திருப்பலி நிறைவேற்றி  மதிய உணவில் கலந்து கொண்டார் திருத்தந்தை.

அதனைத் தொடர்ந்து அங்குச் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைதிக்காகவும் மற்றும் உம்ப்ரியா பகுதியின் அனைத்து விசுவாசிகளுக்காகவும் தான் இறைவேண்டல்  செய்ததாகவும் கூறிய திருத்தந்தை, இந்தப் புனிதர்களின் பூமிக்கு வருகை தந்ததில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 நவம்பர் 2025, 14:20