திருப்பீடத் தூதர்களுக்கான பயிற்சியில் திருத்தந்தையின் வழிகாட்டல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உலகம் முழுவதும் உள்ள திருப்பீட தூதரகங்களில் பணிபுரியும் திருப்பீட அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவது குறித்த திட்டங்களை புதுப்பித்து சிறு வழிகாட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத் தூதர்களுக்கான பாப்பிறை கல்விக்கழகத்தால் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக இப்பணிக்கென அருள்பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கிவரும் நிலையில், இக்கல்விக்கழகத்தின் திட்டத்தில் சில வழிகாட்டல்களை புகுத்தியுள்ளார் திருத்தந்தை.
திருத்தந்தையின் நெருக்கத்தை உலக தலத்திருஅவைகளுக்கும் மக்களுக்கும் கொண்டுவரும் திருப்பீடத் தூதரகங்களின் அதிகாரிகள் நவீன கால சவால்களை எதிர்கொள்ளும் விதமாக புதிய மாற்றங்களை புகுத்துவதாக திருத்தந்தை கூறியுள்ளார்.
அரசியல் உறவுகளின் அறிவியல் பற்றி எடுத்துரைக்கும் இந்த இந்த புதிய வழிகாட்டுதல் அறிக்கை, சட்டம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், அனைத்துலக உறவுகளில் பயன்படுத்தப்படும் மொழிகள் போன்ற துறைகளில் பயிற்சி குறித்தும் எடுத்துரைக்கிறது.
திருப்பீடத் தலைமையகம், தலத்திருஅவைகள், திருஅவை நடவடிக்கைகள், கலாச்சாரத்திற்கும் மனித சமூகத்திற்கும் இடையே நிலவும் உறவு, பேச்சுவார்த்தைகளுக்கான பாதையை ஊக்குவித்தல், அமைதி மற்றும் மத விடுதலைக்கு உறுதியளித்தல் போன்றவைகளின் முக்கியத்துவம் குறித்தும் திருத்தந்தை எடுத்தியம்பியுள்ளார்.
இத்திருப்பீடக் கல்விக்கழகத்தின் திட்டத்தில் திருப்பீடத்தூதர்களுக்கானப் பயிற்சியில் ஓராண்டு முழுவதும் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் மறைப்பணி அனுபவத்தை வழங்குவது இணைக்கப்பட வேண்டும் என 2020ஆம் ஆண்டே வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்