தேடுதல்

ஜூன் 24 நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த குழந்தைகளின் சவப்பெட்டிகளை சுமந்து செல்லும் உறவினர்கள். ஜூன் 24 நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த குழந்தைகளின் சவப்பெட்டிகளை சுமந்து செல்லும் உறவினர்கள்.  (Venezuelan bishops)

வெனிசுலா நிலநடுக்கம்: மனித மாண்பை மையமாகக் கொண்ட மறுகட்டமைப்புக்கு ஆயர்கள் அழைப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவூட்டிய நிலநடுக்கம் நிகழ்ந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், மறுகட்டமைப்புப் பணிகள் ஊழல், அலட்சியம் மற்றும் அரசியல் நலன்களிலிருந்து விடுபட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் மாண்பையும் தேவைகளையும் மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

வடக்கு மற்றும் மத்திய வெனிசுலாவை உலுக்கிய பேரழிவூட்டிய நிலநடுக்கம் நிகழ்ந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் ஆயர்கள், "நல்ல சமாரியர்: நம்பிக்கையின் சாட்சிகள்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுகட்டமைப்புப் பணிகள் அலட்சியம், ஊழல் மற்றும் அரசியல் நலன்களிலிருந்து விடுபட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் மாண்பையும் தேவைகளையும் மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தில் 5,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, வீடுகள், அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் திருஅவை கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் வெனிசுலாவின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இயற்கைப் பேரிடர்களைத் தடுக்க முடியாது என்றாலும், அவற்றை எதிர்கொள்ள அரசாங்கங்கள் உரிய முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டியது தங்களது பொறுப்பு என ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய ஆயர்கள், பொறுப்புணர்வுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் மறுகட்டமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படாவிட்டால், ஏழைகளும் சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களும் தொடர்ந்து துயரங்களைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக பாதுகாப்பான வீடுகள், வேலைவாய்ப்புகள், ஆன்மீக மற்றும் உளவியல் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள்,  மேலும், அரசியல் கைதிகள், நோயாளிகள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களுக்கான அக்கறையும் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் இறைவனின் தண்டனை என்ற கருத்தை திட்டவட்டமாக நிராகரித்த ஆயர்கள், துன்புறுவோருடன் இறைவன் எப்போதும் இருக்கிறார் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இறுதியாக மீட்புப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், திருத்தந்தை மற்றும் உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் மனிதாபிமான உதவிகளுக்கும் ஒற்றுமைக்கும் அவர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

24 ஜூலை 2026, 13:13