தேடுதல்

2026.06.29 Photos Sisters Project PS186

லைபீரியாவின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையளிக்கும் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள்!

லைபீரியாவில் கத்தோலிக்கக் கல்வியை மேம்படுத்தும் பணியில் சகோதரி பிலோமினா அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். தரமான கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் ஏழை மக்களுக்கு கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றுகிறார். திருஅவை, அரசு மற்றும் சமூகங்களின் ஒத்துழைப்பால் லைபீரியாவின் கல்வி எதிர்காலம் மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

லைபீரியாவில், குறிப்பாக கிராமப்புற மற்றும் போதிய வசதிகள் இல்லாத சமூகங்களின் வளர்ச்சியில் கத்தோலிக்கப் பள்ளிகள் நீண்ட காலமாக ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன. மோதல்கள் மற்றும் கடினமான காலங்களில் இவை மக்களுக்கு ஒரு நிலையான வாழ்வை வழங்கியுள்ளன. இந்த பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட, திருக்குடும்ப சகோதரிகள் சபையைச் சேர்ந்த சகோதரி பிலோமினா அவர்கள், கல்வியை ஒரு வாழ்வாதாரமாகவும் ஒரு புனிதப் பணியாகவும் கருதி தனது வாழ்க்கையை அதற்காக அர்ப்பணித்துள்ளார்.

கேப் பால்மாஸ் மறைமாவட்டத்தின் கல்வித்துறை செயளராகவும், லைபீரியாவின் கத்தோலிக்கக் கல்வியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றும் இவர், கத்தோலிக்கப் பள்ளிகளைக் கண்காணித்தல், ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு ஆதரவளித்தல், தரமான கல்வியை மேம்படுத்துதல் மற்றும் அரசு மற்றும் திருஅவை இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவதை உறுதி செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறார்.

மேலும் பள்ளி நிர்வாகத்தை வலுப்படுத்துதல், கற்பித்தல் தரத்தை மேம்படுத்துதல், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கும் கத்தோலிக்கக் கல்வி சென்றடைவதை உறுதி செய்தல் ஆகியவற்றை முதன்மையான பணியாகச் செய்து வருகிறார்.

போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் குறைந்த அளவிலான கற்றல் ஆதாரங்கள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், கத்தோலிக்கப் பள்ளிகள் தொடர்ந்து குழந்தைகளுக்கு, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு, தரமான கல்வியையும் நம்பிக்கையையும் வழங்கி வருகின்றன. மனித மாண்பு மதிக்கப்படும் ஒரு பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலைப் பெற ஒவ்வொரு குழந்தையும் தகுதியுடையவர்கள் என்று சகோதரி பிலோமினா வலியுறுத்துகிறார்.

கல்வியைத் தாண்டி, குடும்பங்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் தொடர்ந்து படிக்க வைப்பதற்கு உதவும் வகையில், பெண்களின் வாழ்வாதார முயற்சிகளின் மூலமும் அவர்களுக்கு சகோதரி பிலோமினா ஆதரவளிக்கிறார்.

லைபீரியாவின் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கும் சகோதரி பிலோமினா அவர்கள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, இளைஞர்களின் ஆர்வம் மற்றும் கல்வியில் திருஅவையின் தொடர்ச்சியான ஈடுபாடு ஆகியவற்றிலிருந்து தனது நம்பிக்கையைப் பெறுகிறார்.

திருஅவை, அரசு மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சி, கத்தோலிக்கக் கல்வியை வருங்காலத் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஒரு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழச் செய்யும் என்று அவர் நம்புகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

04 ஜூலை 2026, 14:44