படிப்பினைகள் வழங்கும் இயேசு படிப்பினைகள் வழங்கும் இயேசு   (Copyright 2021. All rights reserved.)

தடம் தந்த தகைமை : வீட்டு உரிமையாளரைப் போல்....

பழமையை அடியோடு கவிழ்க்க வேண்டும் என்பது இயேசுவின் திட்டமல்ல, அவற்றைப் புனரமைத்துப் புதுவடிவமும், புத்துணர்வும் கொடுக்க முனைந்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்” (மத் 13:52)

விண்ணரசை 'இறையாட்சி' (reign of God) எனக் குறிப்பிடுகிறோம்.  கிரேக்க மொழியில் இறையாட்சியைக் குறிக்க 'பாசிலேயியா' (Basileia) அரமேயத்தில் 'மல்குத்' (malkut) என்னும் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பையோ அதற்குள் வாழ்கின்ற மக்களையோ குறிக்கவில்லை. மாறாக, அரச அதிகாரத்தையும் வல்லமையையும் சுட்டுகின்றது. இங்கே இறையாட்சி என்பதை, 'கடவுள் விரும்புகின்ற மக்களின் நிறைவு நிலை' எனலாம்.

இயேசு அறிமுகம் செய்த இறையாட்சியின் பார்வைகள், கொள்கைகள், அணுகுமுறைகள், செயல்பாடுகள் எல்லாம் புதியனவாக இருந்தன. ஆனால் அவற்றின் ஊற்றுக்கண் பழைய சட்ட மரபுக்களிலிருந்தே புறப்பட்டது. பழமையை அடியோடு கவிழ்க்க வேண்டும் என்பது இயேசுவின் திட்டமல்ல, அவற்றைப் புனரமைத்துப் புதுவடிவமும், புத்துணர்வும் கொடுக்க முனைந்தார். நல்லவை எங்கிருந்தாலும் அதை நாடுவதும், நன்மைக்காக ஒருங்கிணைவதும் நன்மனத்தவரின் நற்குணம்.

இறைவா! ஒவ்வொரு நாளும் நான் புதிதாகப் பிறந்து, புதிதாக வாழ்ந்து, புதிதாகப் பணியாற்ற வேண்டும் என வேண்டுகிறேன். 

"உம் வாக்கின் வழியிலே" என்னும் நூலிலிருந்து அருள்பணி பெனெடிக் M.D. ஆனலின்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஏப்ரல் 2026, 13:44