இந்தியாவில் சலேசிய சபையினரின் நூற்றாண்டு விழா!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
கல்வியின் மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டுடன் இந்தியாவில் தொன் போஸ்கோ சலேசியர்களின் மூன்று கால நூற்றாண்டு விழா பிப்ரவரி 8-ம் தேதியுடன் இனிதே நிறைவுற்றது.
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த நிறைவு விழாவில், இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்திருந்த திருஅவைத் தலைவர்கள், பல்வேறு துறவற சபைகளின் தலைவர்கள் மற்றும் பொதுநிலை உடனுழைப்பாளர்கள் உட்பட ஏறத்தாழ 2,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
"வறுமை, மோதல்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், சலேசிய சபையின் பணிகள் உலகிற்கு இன்றியமையாதவை" என்று அச்சபையின் அதிபர் தந்தை பாபியோ அட்டார் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், இன்றைய இளைஞர்களுக்கு மாண்பு, வாழ்வின் அர்த்தம் மற்றும் நம்பிக்கையை வழங்கும் கல்வி அவசியம் தேவை என்பதை வலியுறுத்திய அதிபர் தந்தை பாபியோ அவர்கள், ஓர் இளைஞனின் பின்னணி அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், மனதையும் இதயத்தையும் ஒருசேர உருவாக்கும் முழுமையான கல்வியில் சலேசியர்கள் கொண்டுள்ள கவனத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் சமூகப் புறக்கணிப்பிலிருந்து மீள உதவிய ஒரு நூற்றாண்டு கால சேவைக்காக இந்திய சலேசியர்களை அதிபர் தந்தை பாபியோ அவர்கள் பாராட்டி மகிழ்ந்தார்.
எதிர்காலத்தை நோக்குகையில், பொதுநிலை உடனுழைப்பாளர்களுடனான (lay collaborators) கூட்டாண்மையை வலுப்படுத்தவும், உள்ளூர் கல்வித் தேவைகளைக் கண்டறியவும், தொன் போஸ்கோவின் தடுப்பு முறையை (preventive system) தொடர்ந்து செயல்படுத்தவும் இச்சபை திட்டமிட்டுள்ளது. இம்முறை கல்வியில் பரிவு, தெளிந்து தேர்தல், ஆன்மிகம் மற்றும் கனிவுடன் கூடிய அன்பை வலியுறுத்துகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்