தேடுதல்

கிறிஸ்தவ மருத்துவமனை கிறிஸ்தவ மருத்துவமனை  

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் முதல் நோய்த்தடுப்பு சிகிச்சை மையம்!

பாகிஸ்தானின் முதல் நோய்த்தடுப்பு சிகிச்சை மையம் அதன் சிந்து மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள புனித எலிசபெத் கத்தோலிக்க மருத்துவமனையில் திறக்கப்பட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள புனித எலிசபெத் கத்தோலிக்க மருத்துவமனையில், இறுதிக்கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முதல் நோய்த்தடுப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.

ஜனவரி 16, வெள்ளிக்கிழமையன்று, இந்தத் தகவலை வழங்கியுள்ள அச்செய்தி நிறுவனம், தேவையில் இருக்கும் நோயாளர்களுக்கு வலி நிவாரணம், ஆறுதல் மற்றும் இரக்கத்துடன் கூடிய  பராமரிப்பை வழங்குவதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் எடுத்துக்காட்டியுள்ளது.

ஜனவரி 12, திங்களன்று நடைபெற்ற விழாவில், பாகிஸ்தானுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் ஜெர்மானோ பெனேமோத்தே, ஹைதராபாத் ஆயர் சாம்சன் ஷுகார்தின், ஹங்கேரி தூதர் சோல்டன் வர்கா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளது.

ஹங்கேரிய அரசு மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த நன்கொடையாளர்களால் ஆதரிக்கப்பட்ட இந்த முயற்சி, மத மற்றும் அம்மாநில அதிகாரிகளால் பாராட்டப்பட்டது என்பதையும் அச்செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

“புனித எலிசபெத் மருத்துவமனை நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் இந்த மையம், புற்றுநோய் நோயாளர்களுக்கு இலவச சேவைகளை வழங்கும்” என்றும், “பாகிஸ்தானில் புற்றுநோய் சிகிச்சை பெரும்பாலும் கட்டுப்படியாகாத அவசர நலவாழ்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்” என்றும் கூறியுள்ளது அச்செய்திக் குறிப்பு.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மறைபரப்புப் பணியாளர் இராபர்ட் மெக்கல்லோக் அவர்கள், "இந்த மையம் அனைத்துக் கலாச்சாரங்கள், இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த தனிநபர்களுக்குப் பணியாற்றுவதன் வழியாக மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தனது சிறப்பான பணிகள் வழியாக ஹைதராபாத் பகுதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள  இம்மருத்துவமனையால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடி வீட்டுப் பராமரிப்பு சேவையின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்புதிய நோய்த்தடுப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

“ஹங்கேரிய அரசின் "ஹங்கேரி உதவிகள்" திட்டம் இந்த நோய்த்தடுப்பு சிகிச்சை மையத்தின் கட்டுமானம் மற்றும் உபகரணங்களுக்கு நிதியளித்தது” என்றும், “புனித எலிசபெத் மருத்துவமனை 1958-ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத்தில் நலவாழ்வுப் பணிகளை வழங்கி வருகிறது” என்றும் தெரிவித்துள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜனவரி 2026, 12:53