தடம் தந்த தகைமை : கிலயாதுமீது படையெடுப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
யூதர்கள் யாம்னியாவிலிருந்து திமொத்தேயுவை எதிர்த்து ஏறத்தாழ இரண்டு கிலோ மீட்டர் சென்ற போது ஐந்நூறு குதிரைவீரர்களுடன் குறைந்தது ஐயாயிரம் அரேபியர்கள் அவர்களை எதிர்த்தார்கள். கடுஞ் சண்டைக்குப்பின் கடவுளின் உதவியால் யூதாவும் அவருடைய ஆள்களும் வெற்றி பெற்றார்கள். தோல்வியுற்ற அந்த நாடோடிகள் தங்களோடு சமாதானம் செய்துகொள்ளுமாறு யூதாவைக் கேட்டுக்கொண்டார்கள்; அவருக்குக் கால்நடைகளைக் கொடுப்பதாகவும் அவருடைய ஆள்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதாகவும் உறுதி மொழிந்தார்கள். அவர்கள் பலவகையிலும் உண்மையிலேயே தமக்குப் பயன்படுவார்கள் என்று உணர்ந்த யூதா அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள உடன்பட்டார். அவரிடமிருந்து உறுதி பெற்றபின் அவர்கள் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினார்கள்.
பல்வேறு இனத்தவர் வாழ்ந்த, மதில்களோடு நன்கு அரண்செய்யப்பட்ட ஒரு நகரையும் யூதா தாக்கினார். அதன் பெயர் காஸ்பின். அதன் உள்ளே இருந்தவர்கள் மதில்களின் வலிமையையும் சேகரிக்கப்பட்ட உணவுப்பொருள்களையும் நம்பி யூதாவிடமும் அவருடைய ஆள்களிடமும் சற்றும் மரியாதையின்றி நடந்து கொண்டார்கள். இழிசொற்களால் அவர்களைத் திட்டியதோடு இறைவனையும் பழித்தார்கள். ஆனால் இடிக்கும் கருவிகளையும் படைப்பொறிகளுமின்றி யோசுவா காலத்தில் எரிகோவைத் தரைமட்டமாக்கிய உலகின் பெரும் தலைவரை யூதாவும் அவருடைய ஆள்களும் துணைக்கு அழைத்து மதில்களை நோக்கிச் சீற்றத்துடன் பாய்ந்து சென்றார்கள். கடவுளின் திருவுளத்தால் நகரைக் கைப்பற்றினார்கள்; எண்ணற்ற பேரைக் கொன்றார்கள். இதனால் அருகே இருந்த ஏறக்குறைய அரை கிலோ மீட்டர் அகலமான ஏரி குருதியால் நிரம்பி வழிந்தது போலத் தோன்றியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்