தேடுதல்

இறந்தோருக்கான மலரஞ்சலி இறந்தோருக்கான மலரஞ்சலி   (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் - அனைத்து புனிதர்கள் மற்றும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழா

இறப்பை மன நிறைவோடு மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதன்,இவ்வுலக வாழ்வை ஆண்டவர் எதிர்பார்க்கும் விதத்தில் வாழ்ந்துள்ளான், புது வாழ்வுக்குத் தன்னை தயாரித்துள்ளான்
அருள்தந்தை S. பால் ராஜ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

புனிதர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து வந்துதித்த வானதூதர்கள் கிடையாது, அவர்கள் இந்த மண்ணுலகில் தோன்றியவர்கள். மண்ணுலகில் தோன்றினாலும் தங்களுடைய மண்ணக வாழ்க்கையை கடவுளுக்கு உகந்ததாய் மாற்றியமைத்துக்கொண்டு, இறைத்திருவுளத்தை தங்களுடைய வாழ்வால், வார்த்தையால் நிறைவேற்றியவர்கள் அவர்கள்தான் புனிதர்கள், தூயவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். புனிதர்களை எதற்காக நாம் நினைவுகூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு " உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள்" " (எபி 13:7)  என்ற விவிலிய வார்த்தை நமக்கு பதில் அளிக்கின்றது.

புண்ணிய வாழ்வு அல்லது சாட்சிய வாழ்வு வாழ்ந்து வந்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடும் வழக்கம் 155- 156 ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வந்திருக்கிறது. கமிர்னா நகரின் ஆயராக இருந்த போலிக்கார்ப்பின் எலும்புகளை எடுத்து, அதனை பத்திரமாக வைத்து இறைமக்கள் அவருடைய விண்ணகப் பிறப்பு விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள். மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சிப்ரியான் என்பவரும் புனிதர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இப்படி இருந்த வழக்கம் திருத்தந்தை ஆறாம் போனிபேஸ் காலத்தில் பந்தயோன் ஆலயம் அனைத்துப் புனிதர்களின் ஆலயமாக மாற்றப்பட்டபிறகு அனைத்துப் புனிதர்களின் விழா திருச்சபை முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இவ்விழாவானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் நாள் கொண்டாடப் பட்டு வருகின்றது.

அனைத்து ஆன்மாக்கள் விழா

இறந்தவர்கள் உடலைக் கடந்தவர்களாதலால், அவர்கள் காலத்தையும், இடத்தையும் வென்றவர்களாகிறார்கள். நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வுக்கு அழுத்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வின் உந்து சக்தியும் இறப்பு. நம் வாழ்வின் இலக்கின் தொடக்கமும் இறப்பே. இறுதி நாளில் இறப்பை எப்படி சந்திக்கிறோமோ அப்படி வாழ்ந்துள்ளோம் என்று பொருள். இறப்பை மன நிறைவோடு மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதன்,இவ்வுலக வாழ்வை ஆண்டவர் எதிர்பார்க்கும் விதத்தில் வாழ்ந்துள்ளான், புது வாழ்வுக்குத் தன்னை தயாரித்துள்ளான் என வெளிப்படுகிறது.

இயேசுவின் பார்வையில் இறப்பு ஒரு திருமுழுக்கு. புது வாழ்வின் தொடக்கம். இயேசு, ஒவ்வொரு சாவையும் வாழ்வின் உதயமாகக் கண்டார். இலாசரின் இறப்பு கடவுளின் மாட்சி வெளிப்படும் நிகழ்வாகக் காண்கிறார்.(யோவா 11'4) பன்னிரெண்டு வயது சிறுமியை உயிர்பெறச் செய்தபோது, "விலகிப் போங்கள், சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்"( மத் 9 :24) என்றபோது, இறப்பை, புத்துயிர் பெற உறங்கி விழிக்கும் அன்றாட நிகழ்வாகக் காண்கிறார். அவ்வகையில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாள்களில் சிறப்பிக்கப்படும் அனைத்து புனிதர்கள் மற்றும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழா பற்றியக் கருத்துக்களை இன்றைய நமது  நிகழ்வில் நாம் காணலாம். இவ்விழா பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்தந்தை பால் ராஜ் அவர்கள் பாண்டிச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டத்தை சார்ந்தவர் 1991ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். கடந்த 34 ஆண்டுகளாக உயர் மறைமாவட்டத்தில் அரும்பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தந்தை அவர்கள், பல பெரிய பங்குகளிலும் திருத்தலங்களிலும் தனது பணியினைத் திறம்படச் செய்துள்ளார். தற்போது திருக்கோவிலூர் மறைவட்டத்தின் முதன்மை குருவாகவும், உயர்மறைமாவட்டத்தின் மிகப்பெரிய பங்கான இரையூர் பங்கின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார் தந்தை அவர்களை அனைத்து புனிதர்கள் மற்று அனைத்து ஆன்மாக்கள் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 அக்டோபர் 2025, 18:12