தடம் தந்த தகைமை – இறைவாக்கினர் மீக்காயாவின் வாக்கு
மெரினா ராஜ் – வத்திக்கான்
இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசர் யோசபாத்தும் அரச உடைகளை அணிந்தவர்களாய்ச் சமாரியா நுழைவாயில் மண்டபத்தில் தம் அரியணையில் அமர்ந்தனர். அவர்கள் முன் பொய்வாக்கினர் அனைவரும் வாக்கு உரைத்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா இரும்புக் கொம்புகளைச் செய்து, “‘இவற்றால் நீர் சிரியரைக் குத்தி அழித்துவிடுவீர்’ என்று ஆண்டவர் கூறுகிறார்” என்றான். பொய்வாக்கினர் அனைவரும் அவ்வாறே வாக்கு உரைத்து, “நீர் இராமோத்து-கிலயாதைத் தாக்குவீர்; வெற்றி பெறுவீர். ஆண்டவர் அவர்களை அரசர் கையில் ஒப்புவிப்பார்” என்றனர்.
மீக்காயாவை அழைக்கப்போன தூதன் அவரை நோக்கி, “இறைவாக்கினர் அனைவரும் ஒரே வாய்ப்பட அரசருக்கு உகந்ததாகவே வாக்குரைத்துக் கொண்டிருக்கின்றனர். உம் வாக்கும் அவர்களது வாக்கைப்போல் இருக்கட்டும். அரசருக்கு உகந்ததாகவே பேசும்” என்றான். அதற்கு மீக்காயா, “ஆண்டவர் மேல் ஆணை! என் கடவுள் எனக்குச் சொல்வதையே நான் உரைப்பேன்” என்றார். அவர் அரசனிடம் வந்தபோது அவன் அவரிடம், “மீக்காயா! நாங்கள் இராமோத்து-கிலயாதின் மீது போர் தொடுக்கலாமா? வேண்டாமா?” என்று கேட்டன். அதற்கு அவர், “போங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்; எதிரிகள் உங்கள் கையில் ஒப்படைக்கப்படுவார்கள்” என்றார். அரசன் அவரிடம், “ஆண்டவர் திருப்பெயரால் உண்மையைத் தவிர வேறு எதையும் என்னிடம் சொல்லலாகாது என்று உன்னை எத்தனை முறை ஆணையிடவைப்பது?” என்றான். அப்பொழுது மீக்காயா, “இஸ்ரயேலர் யாவரும் ஆயனில்லா ஆடுகளைப்போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர், ‘இவர்களுக்குத் தலைவன் இல்லை; அவரவர்தம் வீட்டிற்கு அமைதியாகத் திரும்பிப் போகட்டும்’ என்றார்” என்று கூறினார். அதைக் கேட்ட இஸ்ரயேலின் அரசன், யோசபாத்தை நோக்கி, “இவன் எனக்குச் சாதகமாக அன்று, பாதகமாகவே இறைவாக்கு உரைப்பான் என்று நான் முன்பே உமக்குச் சொல்லவில்லையா?” என்றான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்