தேடுதல்

களத்தில் ரூத்துடன் உரையாடும் போவாசு களத்தில் ரூத்துடன் உரையாடும் போவாசு  

தடம் தந்த தகைமை : போவாசின் நேர்மையான உள்ளம்!

போவாசு தனது நேர்மையான உள்ளதால், ரூத்திடம் கனிவுடன் நடந்துகொண்டதுடன், அவருக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முடிவெடுத்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அந்நாள்களில் போவாசு ரூத்தை நோக்கி,  “என் மகளே, ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! நீ இது வரை காட்டிய குடும்பப்பற்றைவிட இப்போது காட்டும் குடும்பப்பற்றே மேலானது என்பேன். ஏனெனில் பணமுள்ள ஓர் இளைஞனை நீ நாடவில்லை; ஏழையாயினும் இளைஞனே வரவேண்டும் என்று நீ கேட்கவில்லை. என் மகளே, கவலைப்படாதே! என் உறவின் முறையினர் அனைவருக்கும் நீ எவ்வளவு நல்லவள் என்பது தெரியும். நீ கேட்பது அனைத்தையும் நான் செய்து முடிப்பேன். நான் உன்னைக் காப்பாற்றும் கடமையுள்ள உன்னுடைய முறை உறவினன் என்பது உண்மைதான். எனினும், என்னைவிட இன்னும் நெருங்கிய முறை உறவினர் ஒருவர் உனக்கு இருக்கிறார். இந்த இரவு கழியும்வரை நீ இங்கேயே இரு. காலையில் அவர் உன்னுடைய முறை உறவினராகத் தம் கடமையை ஏற்றுக் கொள்ள முன்வருவாரானால் நல்லது. அவர் ஏற்றுக் கொள்ளாவிடில், நானே அக்கடமையை ஏற்றுக்கொள்வேன். வாழும் ஆண்டவர் மேல் இதை ஆணையிட்டுக் கூறுகிறேன். பொழுது புலரும்வரை இங்கேயே படுத்திரு” என்றார்.

அவ்வாறே ரூத்து பொழுது புலரும்வரை அவர் அருகே படுத்திருந்தார். ஒரு பெண் களத்திற்கு வந்திருந்தது யாருக்கும் தெரியக்கூடாது என்று போவாசு ஏற்கனவே அவரிடம் சொல்லியிருந்தார். அதற்கிணங்க, ஆள் அடையாளம் கண்டுகொள்ள இயலாத வைகறைப் பொழுதிலேயே ரூத்து எழுந்துவிட்டார். போவாசு அவரிடம், “உன் போர்வையை விரித்துப்பிடி” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். அவர் ஆறு மரக்கால் எடையுள்ள வாற்கோதுமையை அதில் கொட்டி, அதை அவர் எடுத்துப் போகுமாறு கொடுத்தார். ரூத்து மாமியாரிடம் வந்ததும், நகோமி, “மகளே, என்ன நடந்தது?” என்று கேட்டார். போவாசு தமக்குச் செய்ததையெல்லாம் ரூத்து கூறினார். மேலும் அவர், “நான் உம்மிடம் வெறுங்கையோடு வரக்கூடாது என்று அவர் ஆறு மரக்கால் வாற்கோதுமையும் கொடுத்தார்” என்றார். நகோமி அவரிடம், “மகளே, இது எப்படி முடியும் என்பதை அறியும்வரை காத்திரு. அவர் காலந்தாழ்த்தமாட்டார்; இன்றே இதற்கு நல்லதொரு முடிவு காண்பார்” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மார்ச் 2025, 13:39